டில்லி வந்தார் பின்லாந்து அதிபர்: முக்கிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்து

புதுடில்லி: ஐரோப்பிய நாடான பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப், நான்கு நாள் அரசுமுறை பயணமாக நேற்று டில்லி வந்தடைந்தார். இரு நாட்டுக்கும் இடையே வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் உறவுகளை மேம்படுத்துவதே அவரது பயணத்தின் முக்கியம் நோக்கம்.

டில்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய ஸ்டப்புக்கு, வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் சிறப்பான வரவேற்பு அளித்தார்.

பேச்சு

பிரதமர் மோடியை இன்று சந்திக்கும் பின்லாந்து அதிபர் ஸ்டப், இருதரப்பு உறவை வலுப்படுத்தும் விதமான பேச்சுகளில் ஈடுபடுவார் என தெரிகிறது. குறிப்பாக, இரு நாட்டுக்கும் இடையே இன்று பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, இன்று மாலை டில்லியில் துவங்கும், ‘ரைசினா’ சர்வதேச மாநாட்டில் தலைமை விருந்தினராக அவர் பங்கேற்கிறார்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதி சி.பி.ராதா கிருஷ்ணன் ஆகியோரையும் பின்லாந்து அதிபர் ஸ்டப் சந்திக்கிறார்.

பெருமிதம்

அதன் பின், நாளை மும்பை புறப்பட்டுச் செல்லும் அவர், பிரபல தொழிலதிபர்களை சந்தித்து பேசுகிறார். பின், வரும் சனிக் கிழமை அன்று இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு, மீண்டும் பின்லாந்து திரும்புகிறார்.

டில்லி புறப்படும் முன் சுற்றுப்பயணம் குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்ட ஸ்டப், ‘இந்தியா – பின்லாந்து இடையிலான உறவுகள் வலுப்படும். குறிப்பாக, வர்த்தகத்தில் இரு நாட்டுக்கும் இடையே முழு ஒத்துழைப்பு ஏற்படும்’ என கூறியிருந்தார்.

பின்லாந்து அதிபர் ஸ்டப்பின் வருகையால், இரு நாட்டு உறவுகள் புதிய உச்சத்தை அடையும் என பிரதமர் மோடியும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Source link