'டி-20' உலக கோப்பை அரையிறுதி: இந்தியாவை சமாளிக்குமா இங்கிலாந்து

மும்பை: ‘டி-20’ உலக கோப்பை அரையிறுதியில் இன்று இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. எதிரணியின் வலுவான சுழல் தாக்குதலை சமாளித்து, இந்தியா பைனலுக்கு முன்னேற வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்தியா, இலங்கையில் 10வது ‘டி-20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்தியா, இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இத்தொடரின் துவக்கத்தில் பலமான அணியாக காணப்பட்ட இந்தியா, வலுவான எதிரணிகளுக்கு எதிராக திணறலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

‘சூப்பர்-8’ சுற்று முதல் போட்டியில் சறுக்கிய பின் (எதிரணி-தெ.ஆப்.,) சுதாரித்துக் கொண்டது இந்தியா. ‘டாப்-3’ இடதுகை பேட்டர்கள் வரிசையில் மாற்றம் செய்தது, சஞ்சு சாம்சனை களமிறங்கும் 11 பேர் கொண்ட அணியில் சேர்த்தது போன்ற முடிவுகள் நன்கு கைகொடுத்தன. அடுத்த இரு போட்டியில் வென்று, ஆறாவது முறையாக அரையிறுதிக்குள் நுழைந்தது.

சர்வதேச அரங்கில் அறிமுகம் ஆன 11 ஆண்டில், முதன் முறையாக, பெரிய தொடரின் காலிறுதி போன்ற வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான போட்டியில் 97 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்து, இந்திய அணியை கரை சேர்த்துள்ளார் சாம்சன் 31 (3 போட்டி, 143 ரன்). இது அவரது தன்னம்பிக்கையை அதிகரித்து இருக்கும். தவிர சக துவக்க வீரர் அபிஷேக் சர்மாவும் (6ல் 80) சிறப்பாக செயல்பட துாண்டுகோலாக அமையலாம்.

தொடரின் துவக்கத்தில் அசத்திய இஷான் கிஷான் (224), நன்கு பழக்கமான மும்பை மண்ணில் மீண்டு வர வேண்டும். கேப்டன் சூர்யகுமார் (231), திலக் வர்மா (178), ‘ஆல் ரவுண்டர்’ ஹர்திக் பாண்ட்யா (172) என, பலருக்கும், இம்மைதானத்தின் பிரிமியர் தொடர் அனுபவம், கைகொடுக்கும் என நம்பலாம். அடுத்து வரும் ஷிவம் துபேவும் (166, 5 விக்.,) சிறப்பாக செயல் படுகிறார்.

வருண் நம்பிக்கை

பவுலிங்கை பொறுத்தவரையில் பும்ரா (9 விக்.,), அர்ஷ்தீப் (8) கூட்டணியில் மாற்றம் இருக்காது. அதேநேரம், மைதானத்தில் அளவு சிறியது என்பதால், சுழற்பந்து வீச்சாளர்கள் வருண் சக்ரவர்த்தி (12 விக்.,), அக்சர் படேல் (5ல் 7) துல்லியமாக செயல்பட்டு, ரன் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும். அரையிறுதியில் திடீரென குல்தீப்பை அணியில் சேர்த்து, இந்தியா ‘ரிஸ்க்’ எடுக்காது எனத் தெரிகிறது.

கேப்டன் பலம்

இங்கிலாந்து அணிக்கு துவக்கத்தில் அனுபவ பட்லர் (7 போட்டி, 62 ரன்), பில் சால்ட் (125) ஜோடி ‘பார்ம்’ இல்லாமல் தடுமாறுகிறது. பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்து அணியை மீட்ட கேப்டன் ஹாரி புரூக் (228), வில் ஜாக்ஸ் (191 ரன், 7 விக்.,), பெத்தெல் (175), ஆல் ரவுண்டர் சாம் கர்ரான் (149) கைகொடுக்க, ஆறாவது முறையாக அரையிறுதியில் கள மிறங்குகிறது.

பந்து வீச்சில் ‘சீனியர்’ ஆர்ச்சர் (10 விக்.,), ‘ஷார்ட் பிட்ச்’ பந்துகள் தொல்லை தரலாம். 7 போட்டியில் 4ல் ஆட்ட நாயகன் ஆன சுழற்பந்து வீச்சாளர் வில் ஜாக்ஸ், மீண்டும் அச்சுறுத்த உள்ளார். இவருடன் அடில் ரஷித் (11 விக்.,), லியாம் டாசன் (10), என மூன்று ‘சுழல்களை’ நமது பேட்டர்கள் சமாளிப்பதில் தான், இந்தியாவின் வெற்றி தெரியவரும். தவிர நியூசிலாந்துக்கு எதிராக அசத்திய ரேஹன் அகமதுவும் தொல்லை தரலாம்.

Source link