பொள்ளாச்சி: ”தி.மு.க., அரசு, டெல்டா விவசாயிகளின் நலனை அடமானம் வைத்து, காங்., உடன் கூட்டணி வைத்துள்ளது,” என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை, பொள்ளாச்சியில், ‘பிரதமரின் மக்கள் மருந்தகம்’ குறித்த விழிப்புணர்வு விழாவில் அண்ணாமலை பங்கேற்று பேசுகையில், ”பிரதமர் மோடி, கடந்த 2014ல், மக்கள் மருந்தகம் கொண்டு வந்தபோது, 40 கடைகள் துவங்கப்பட்டன. தற்போது, 18 ஆயிரம் கடைகளை தாண்டியுள்ளது; தமிழகத்தில் மட்டும், 1,300 உள்ளன. அடுத்த ஆண்டு, 25 ஆயிரமாக உயரும்.
இதில், ஏழை, நடுத்தர மக்களுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் கிடைக்கின்றன. இது சேவைக்காக துவங்கப்பட்டதே தவிர, வருமானத்துக்கானது அல்ல. மக்களுக்கு தேவையான மருந்துகள், உரிய நேரத்தில், குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என இத்திட்டத்தை பிரதமர் கொண்டு வந்தார்,” என்றார்.
பின், அவர் அளித்த பேட்டி: சிவில் சர்வீஸ் தேர்வு எழுத தயாராகும் மாணவர்களுக்கு, முதன்மை தேர்வுக்கு 7,500 ரூபாய், மெயின் தேர்வுக்கு, 25 ஆயிரம் ரூபாய், நேர்முக தேர்வுக்கு, 50 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்காக, முதல்வர் ஸ்டாலினை பாராட்டுகிறோம். பிற மாநிலங்களை போன்று ஊக்கத்தொகையை அதிகரிக்கலாம்.
அதே நேரத்தில், முதல்வர் கடமையை செய்து விட்டு, அதை விளம்பரப்படுத்துவதை கண்டிக்கிறோம். எதையும் விளம்பரமாக இல்லாமல் கடமையை செய்ய வேண்டும். கர்நாடகாவில், காங்கிரசை சேர்ந்த முதல்வர் சித்தராமையா, மேகதாது அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போது, தி.மு.க. – காங்., கூட்டணி உறுதியான பின், இந்த அறிவிப்பு வந்துள்ளது. தி.மு.க., அரசு, டெல்டா விவசாயிகளின் நலனை அடமானம் வைத்து, காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ளது. டெல்டா விவசாயிகளுக்கு, தி.மு.க., அரசு துரோகம் இழைத்துள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
