மதுரையிலும் திருச்சியிலும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நடத்திய சீட் பங்கீடு பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத சூழலே நிலவியது.
பியூஷ் கோயலுமே, “டெல்லியில் பேசிக்கொள்ளுங்கள்…” என்று டென்ஷனாகச் சொல்லிவிட்டு பறந்தார். இந்தச்சூழலில், நேற்று டெல்லிக்குச் சென்றிருந்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சீட் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கலந்தாலோசித்திருக்கிறார். அதைத்தொடர்ந்து, தே.ஜ கூட்டணியில் சீட் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

டெல்லியில் நடந்த எடப்பாடி – அமித் ஷா சந்திப்பு குறித்து, அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம். “டெல்லியிலுள்ள அமித் ஷாவின் இல்லத்தில், கிட்டத்தட்ட இரண்டு மணிநேரத்துக்கு நடந்திருக்கிறது அந்தச் சந்திப்பு.
பேக்கேஜ் முறையில் பா.ஜ.க எதிர்பார்க்கும் எண்ணிக்கையில் சீட் ஒதுக்கீடு செய்ய எடப்பாடிக்கு விருப்பமில்லை. பா.ஜ.க-வுக்கு 25 தொகுதிகளை ஒதுக்கிவிட்டு, அவர்களுடன் அணி சேர்ந்திருக்கும் அ.ம.மு.க-வுக்கு எட்டு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மூன்று, ஐ.ஜே.கே கட்சிக்கு இரண்டு, ஏ.சி.சண்முகம், என்.ஆர்.தனபாலன், திருமாறன், ஜான்பாண்டியன் ஆகியோருக்கு தலா ஒன்று ஒதுக்க திட்டமிட்டிருக்கிறார் எடப்பாடி.
அதோடு, பா.ம.க-வுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கியதுபோக, மீதமிருக்கும் 174 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்களைக் களமிறக்கவும் முடிவெடுத்திருக்கிறார். அதில், ஒரு சீட் புரட்சி பாரதம் கட்சிக்கு வழங்கப்படவிருக்கிறது.
