டெஹ்ரான்:அமெரிக்கா 20 மணி நேரத்தில் சரணடையாவிட்டால், அதன் நட்பு நாடுகள் கற்காலத்துக்கு செல்லும் என்று ஈரான்

டெஹ்ரான்:அமெரிக்கா 20 மணி நேரத்தில் சரணடையாவிட்டால், அதன் நட்பு நாடுகள் கற்காலத்துக்கு செல்லும் என்று ஈரான் அதிரடியாக எச்சரித்துள்ளது.

மேற்காசிய நாடான ஈரான் உடனான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா விதித்திருந்த கெடு நெருங்கிவிட்டது. ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது உட்பட 15 அம்ச திட்டத்திற்கு ஈரான் ஒப்புக்கொள்ளாவிட்டால் கற்காலத்துக்கு செல்லும் அளவுக்கு மிகப்பெரிய அழிவை சந்திக்கும் என்று, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்து வந்தார்.

ஆனால் இந்த மிரட்டல்களுக்கு அஞ்சாத ஈரான், தற்போது டிரம்புக்கே பதில் கெடு விதித்துள்ளது. ஈரான் சபாநாயகரின் முக்கிய ஆலோசகரான மஹ்தி மொஹம்மதி, ‘டிரம்ப் ஈரானிடம் சரணடைய 20 மணி நேரம் அவகாசம் தருகிறோம். இல்லையெனில் அவரது நட்பு நாடுகள் கற்காலத்துக்கு அனுப்பப்படும். நாங்கள் ஒரு போதும் பின்வாங்க மாட்டோம்’ என, சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ரயில் பயணம் வேண்டாம்! டிரம்பின் காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், ‘ஈரானியர்கள் இன்று ரயிலில் பயணம் செய்ய வேண்டாம்’ என்று இஸ்ரேல் ஒரு வினோதமான அவசர எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது குறித்து இஸ்ரேல் ராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கையில் கூறியிருப்பதாவது: உங்கள் பாதுகாப்புக்காக இந்த நிமிடம் முதல் ரயில்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ரயில்களிலோ அல்லது தண்டவாளங்களுக்கு அருகிலோ இருப்பது உங்கள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையை தொடர்ந்து, ஈரானின் இரண்டாவது பெரிய நகரமான மஷ்ஹத் மற்றும் பிற முக்கிய நகரங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை மின் உற்பத்தி மையங்கள் மற்றும் பாலங்கள் மீது மட்டுமே கவனம் செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது, ரயில்வே நெட்வொர்க்கை அழிப்போம் என இஸ்ரேல் மறைமுகமாக எச்சரித்துள்ளது.

தாக்குதலில் 18 பேர் பலி ஈரானின் அல்போர்ஸ் மாகாணத்தில் நேற்று நடத்தப்பட்ட வான்வழி தாக்குதல்களில், இரு குழந்தைகள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர். காயமடைந்த 24 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அல்போர்ஸ் மாகாணம் மட்டுமின்றி, அந்நாட்டு தலைநகர் டெஹ்ரான், கோர்ரமாபாத் சர்வதேச விமான நிலையம் மற்றும் ஷிராஸில் உள்ள ஒரு பெட்ரோ கெமிக்கல் ஆலை ஆகியவையும் தாக்குதலுக்குள்ளாகின. இத்தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஈரான், இது மனிதாபிமானமற்ற செயல் என தெரிவித்துள்ளது.

சவுதி மீது ஏவுகணை தாக்குதல் ஈரானிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அல் ஜுபைல் தொழிற்பேட்டையில் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. 1,000 சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ள இந்த தொழிற்பேட்டை உலகின் மிகப்பெரிய தொழிற்பேட்டைகளில் ஒன்றாகும். சவுதி அரேபியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதத்துக்கும் மேல் இத்தொழிற்பேட்டை பங்களிக்கிறது. இத்தொழிற்பேட்டையை நோக்கி ஈரானில் இருந்து 7 பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவப்பட்டன. இதை, சவுதி அரேபியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு இடை மறித்து அழித்தன. இருப்பினும், அந்த ஏவுகணைகளின் பாகங்கள் மற்றும் ட்ரோன்கள் அல் ஜுபைல் தொழிற்பேட்டையில் உள்ள சவுதியை தளமாகக் கொண்டு இயங்கி வரும் உலகின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான வேதிப்பொருள் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ‘சவுதி பேசிக் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன்’ மீது விழுந்தது. இதனால் அந்த ஆலையில் பெரிய தீ விபத்து ஏற்பட்டது.

Source link