டெஹ்ரான்: ஈரானின் புதிய ஆட்சியாளரும், மத குருவுமான மொஜ்தபா கமேனி நலமுடன் பாதுகாப்பாக இருக்கிறார் என அந்நாட்டு அதிபரின் மகன் யூசுப் பெசேஷ்கியன் கூறியுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ஈரானின் ஆட்சியாளராக இருந்த கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். புதிய ஆட்சியாளராக யார் தேர்வு செய்யப்பட்டாலும் அவரை கொல்வோம் என இஸ்ரேல் தெரிவித்து இருந்தது. ஈரானின் புதிய ஆட்சியாளரை தன்னை கேட்டு முடிவு செய்ய வேண்டும் என டிரம்ப் கூறியிருந்தார்.அதே நேரத்தில் புதிய ஆட்சியாளராக கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டார்.
நேற்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின் தாக்குதலில் மொஜ்தபா படுகாயம் அடைந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இது குறித்து ஈரான் எதுவும் கூறாமல் இருந்தது.
இந்நிலையில் ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியான் மகன் யூசுப் டெலிகிராம் செயலியில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: மொஜ்தபா காயம் அடைந்ததாக எனக்கு தகவல் வந்தது. உடனடியாக அவருடன் தொடர்பில் இருந்த நண்பர்களுடன் பேசினேன். ஈரானின் புதிய ஆட்சியாளர் நலமுடன் ஆரோக்கியமாக உள்ளதாக தெரிவித்தனர். எந்த பிரச்னையும் இல்லை என்றனர். இதற்காக இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என பதிவிட்டு உள்ளார்.
