டெஹ்ரான்: ஈரானின், 4,000 கி.மீ., துார தாக்குதல் முயற்சி உலக நாடுகளை வியப்படைய செய்துள்ளது. மேற்காசிய நாடான ஈரான்

டெஹ்ரான்: ஈரானின், 4,000 கி.மீ., துார தாக்குதல் முயற்சி உலக நாடுகளை வியப்படைய செய்துள்ளது.

மேற்காசிய நாடான ஈரான் மீது, அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த போர், 20 நாட்களை கடந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு, இந்திய பெருங்கடலில், டியாகோ கார்சியா தீவில் உள்ள, அமெரிக்க – பிரிட்டன் தளத்தை குறிவைத்து ஈரான் இரு நடுத்தர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ஏவியதாக கூறப்படுகிறது.

இந்த இரு ஏவுகணைகளில் ஒன்று தோல்வி அடைந்ததாகவும், மற்றொன்று இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது தோல்வி அடைந்தாலும், ஈரானின் ஏவுகணை தாக்குதல் துாரம் உலக நாடுகளிடையே ஆச்சரியத்தையும், கேள்வியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில் இருந்து டியாகோ கார்சியா தீவு, 4,000 கி.மீ., தொலைவில் உள்ளது. தங்களிடம், 2,000 கி.மீ., துாரம் வரை சென்று தாக்கும் திறனுள்ள ஏவுகணைகள் மட்டுமே இருப்பதாக ஈரான் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இரு மடங்கு துாரம் சென்று தாக்குதல் நடத்த முயன்றிருப்பது, உலகிற்கு தெரியாத மற்றும் அறிவிக்கப்படாத திறன்களை ஈரான் கொண்டுள்ளதையே காட்டுவதாகக் கூறப்படுகிறது.

டியாகோ கார்சியாவை தாக்க முயன்றதன் வாயிலாக, ஈரான் தன் மோதல் களத்தை மேற்காசிய பிராந்தியத்தில் இருந்து இந்திய பெருங்கடல் பிராந்தியத்திற்கு மாற்றியுள்ளது.

தாக்குதலில் இலக்கு எட்டப்பட்டதா என்பது கேள்வியல்ல. அந்த இலக்கு எட்டப்படக்கூடிய துாரத்தில் தான் உள்ளது என்பதை உலகுக்கு ஈரான் காட்டியதே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும், அமெரிக்காவின் விலை உயர்ந்த பாதுகாப்பு அமைப்பான, எஸ்.எம்., 3 அமைப்பை செயல்பட வைத்ததே ஈரானின் வெற்றியாக பார்க்கப்படுகிறது–.

ஐரோப்பா மற்றும் இந்திய பெருங்கடல் முழுதும் தாக்க முடியும் என்பதை ஈரான் மறைமுகமாக தெரிவித்துள்ளது.

Source link