டெஹ்ரான்: மேற்காசிய நாடான ஓமனின் கடல் பகுதி அருகே, ரோந்து பணியில் இருந்த அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலை தாக்கி சேதப்படுத்தியதாக ஈரான் தெரிவித்ததை, அமெரிக்க கடற்படை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
மேற்காசிய நாடான ஈரானுடன், அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து, 14 நாட்களாக சண்டையிட்டு வருகின்றன.
மேற்காசிய பிராந்தியத்தில், இரண்டு போர்க்கப்பல்களை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. ஒன்று, ஆபிரகாம் லிங்கன், இரண்டாவது ஜெரால்டு ஆர்.போர்டு.
இதில், ஓமன் கடல் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலை குறிவைத்து துல்லியமான தாக்குதல் நடத்தியதாக, ஈரானின் புரட்சிகர காவல் படை தெரிவித்தது. ‘ஈரானின் கடற்பரப்பில் இருந்து, 340 கி.மீ., தொலைவில் இந்த தாக்குதல் நடந்தது.
‘அதில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் அமெரிக்க கப்பலை சேதப்படுத்தியதால், கப்பல் அந்தப் பகுதியை விட்டு பின்வாங்கியது’ என, ஈரான் கூறியது.
மேலும், பஹ்ரைனில் உள்ள மினா சல்மான் தளத்தில் அமைந்துள்ள அமெரிக்க கடற்படை தளத்தையும் தாக்கி சேதப்படுத்தியதாகவும் ஈரான் தெரிவித்தது. ஆனால், இந்த தகவலை அமெரிக்கா மறுத்து உள்ளது.
இது குறித்து, அமெரிக்க கடற்படை அதிகாரிகள் கூறியதாவது:
அரபிக் கடலில் நிறுத்தப்பட்ட ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலுக்கு அருகில் ஈரானிய கப்பல் ஒன்று வந்தது. அதை எச்சரிக்க அமெரிக்க கடற்படை கப்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
ஆனால், குறி தவறியது. பின், ஹெல்பையர் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டு, அந்த ஈரானிய கப்பல் மீது இரண்டு ஏவுகணைகள் செலுத்தப்பட்டன. இதில், கப்பலின் பெரும்பகுதி அழிந்திருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
