உலக அளவில் தங்கம் வாங்குவதில் இந்தியா இன்னும் ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதாக, உலக தங்க கவுன்சிலின் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் டைட் தெரிவித்துள்ளார். மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக இந்தியா தனது தங்கம் இருப்பை இன்னும் பல மடங்கு உயர்த்த வேண்டியுள்ளது என அவர் பேசியிருப்பது இந்திய முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வால் நகைகளுக்கான தேவை சற்றே குறைந்திருந்தாலும், முதலீட்டு ரீதியான தேவை 17 சதவீதம் அதிகரித்துள்ளது. 2025ல் இந்தியாவின் மொத்த தங்க தேவை 711 டன்களாக இருந்தது.
கலாசார ரீதியாக, தங்கம் இந்தியர்களோடு பிணைக்கப்பட்டுள்ள நிலையில், இனிவரும் காலங்களில் தனிநபர்கள் மட்டுமன்றி, பென்ஷன் பண்டுகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களும் தங்களது முதலீட்டு தொகுப்பில் தங்கத்தை ஒரு முக்கிய அங்கமாக மாற்றும்.
சர்வதேச அளவில் பார்க்கும்போது, தங்க விலை உயர்வுக்கு உக்ரைன் – -ரஷ்யா போன்ற புவிசார் அரசியல் பதற்றங்கள் ஒரு காரணம் என்றாலும், அதைவிட ஆழமான ஒரு காரணம் இருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பொதுக்கடன் அதிகரித்து வருவது உலக பொருளாதாரத்தில் ஒரு பயத்தை உருவாக்கியுள்ளது. தங்கம் விலை ஏற்றத்துக்கு பின்னால் நாடுகளின் கடன் சுமை ஒளிந்துள்ளது.
இதனால், பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் மீது, உலக நாடுகளின் மத்திய வங்கிகள் ஆர்வம் காட்டுகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ஆண்டுக்கு 1,000 டன் தங்கம் வாங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பொதுக்கடன் அதிகரித்து வருவது உலக பொருளாதாரத்தில் ஒரு பயத்தை உருவாக்கியுள்ளது. தங்கம் விலை ஏற்றத்துக்கு பின்னால் ‘நாடுகளின் கடன் சுமை’ ஒளிந்துள்ளது
