பாங்காக்: பாரா வில்வித்தையில் உலக சாம்பியன் இந்தியாவின் ஷீத்தல் தேவியை வீழ்த்தி, தங்கம் வென்றார் சக வீராங்கனை பாயல் நாக்.
தாய்லாந்தின் பாங்காக் நகரில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா உலக வில்வித்தை சீரிஸ் நடந்தது. காம்பவுண்டு தனிநபர் பிரிவு பைனலில் இரு கைகள் இல்லாத, உலகின் ‘நம்பர்-1’ வீராங்கனையான இந்தியாவின் ஷீத்தல் தேவி 19, இரு கால், கைகள் இல்லாத உலகின் முதல் வில்வித்தை நட்சத்திரம், சக வீராங்கனை பாயல் நாக்கை 18, எதிர்கொண்டார். இதில் பாயல் 139-136 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். வில்வித்தையில் தனது ‘ரோல் மாடல்’ ஷீத்தலை சாய்த்து, தங்கம் கைப்பற்றினார் பாயல்.
ஆண்கள் பிரிவு பைனலில் இந்தியாவின் தோமன் குமார், 146-142 என ஆஸ்திரேலியாவின் ஜோனாதன் மில்னேவை வீழ்த்தி தங்கம் வசப்படுத்தினார்.
ரிகர்வ் பிரிவு பெண்களுக்கான பைனலில் இந்தியாவின் பாவ்னா, 6-0 என தாய்லாந்தின் பத்தாராபனை சாய்த்து தங்கம் வசப்படுத்தினார். ஆண்களுக்கான பைனலில் இந்தியாவின் ஹர்விந்த் சிங், 3-7 என இந்தோனேஷியாவின் ஹோலிடினிடம் தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. வீல்சேர் பிரிவு பைனலில் இந்திய வீராங்கனை ஸ்வாதி 3-7 என தென் கொரியாவின் ஜியும் கிம்மிடம் தோற்று, வெள்ளி வசப்படுத்தினார்.
நேற்று கடைசி நாளில் இந்தியா 3 தங்கம், 3 வெள்ளி, 1 வெண்கலம் என 7 பதக்கம் கைப்பற்றியது.
மின்சார விபத்து
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பாயல் நாக் 18. ஏழு வயதில் (2015) விளையாடிக் கொண்டிருந்த போது 11,000 ‘வோல்ட்’ மின்சார கம்பி உரசியதில், இரு கை, கால்கள் அகற்றப்பட்டன. குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். வாயினால் ஓவியம் வரைந்தார். 2022ல் பயிற்சியாளர் குல்தீப், இவரை காஷ்மீர் அழைத்துச் சென்று, ஷீத்தல் தேவியுடன் இணைந்து வில்வித்தை பயிற்சியில் ஈடுபடுத்தினார்.
2025 முதல் போட்டிகளில் பங்கேற்றார். சர்வதேச அரங்கில் களமிறங்கிய 2வது போட்டியில், தங்கம் வென்று அசத்தினார்.
