தடகளம்: ஷா'காரி முதலிடம்

விக்டோரியா: ஆஸ்திரேலியாவில், ‘ஸ்டாவெல் கிப்ட்’ குறுகிய துார (120 மீ.,) ஓட்டப்பந்தத்தின் 144வது சீசன் நடந்தது. இதில் பந்தய துாரத்தை 13.15 வினாடியில் கடந்த அமெரிக்க வீராங்கனை ஷா’காரி ரிச்சர்ட்சன் 26, முதலிடம் பிடித்தார். இவருக்கு, கோப்பையுடன் ரூ. 25.57 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. பாரிஸ் ஒலிம்பிக் (2024) 100 மீ., ஓட்டத்தில் வெள்ளி வென்ற ஷா’ரிகா, 4X100 மீ., தொடர் ஓட்டத்தில் இவர் இடம் பெற்றிருந்த அமெரிக்கா தங்கம் வென்றது.

ஜெசிகா ‘சாம்பியன்’

சார்லஸ்டன்: அமெரிக்காவில், டபிள்யு.டி.ஏ., சார்லஸ்டன் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. ஒற்றையர் பிரிவு பைனலில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, உக்ரைனின் யூலியா மோதினர். இதில் ஜெசிகா 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். தொடர்ந்து 2வது முறையாக (2025, 2026) கோப்பை வென்ற ஜெசிகா பெகுலா, டபிள்யு.டி.ஏ., ஒற்றையரில் தனது 11வது பட்டத்தை தட்டிச் சென்றார்.

அரையிறுதியில் லீட்ஸ்

கிழக்கு லண்டன்: இங்கிலாந்தில், எப்.ஏ., கோப்பை கால்பந்து 145வது சீசன் நடக்கிறது. கிழக்கு லண்டனில் நடந்த காலிறுதியில் வெஸ்ட் ஹாம் யுனைடெட், லீட்ஸ் யுனைடெட் அணிகள் மோதின. கூடுதல் நேரத்தின் முடிவில் போட்டி 2-2 என சமநிலையில் இருந்தது. பின், ‘பெனால்டி ஷூட் அவுட்’ முறையில் அசத்திய லீட்ஸ் அணி 4-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 39 ஆண்டுகளுக்கு பின், இத்தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியது லீட்ஸ். இதில் கோவன்ட்ரி சிட்டி அணியிடம் தோற்றது.

எக்ஸ்டிராஸ்

* சென்னையில் இன்று நடக்கவுள்ள ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் சென்னை, இன்டர் காஷி அணிகள் மோதுகின்றன. சென்னை அணி, இதுவரை விளையாடிய 5 போட்டியில், ஒரு வெற்றி, 2 ‘டிரா’, 2 தோல்வி என, 5 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளது.

* ஐதராபாத்தில், வரும் ஜூன் 16-28ல் ரக்பி பிரிமியர் லீக் (ஆர்.பி.எல்.,) 2வது சீசன் நடக்கவுள்ளது. ‘நடப்பு சாம்பியன்’ சென்னை, மும்பை, பெங்களூரு, டில்லி உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கின்றன.

* இத்தாலியில் நடக்கும் ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் தகுதிச் சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் 6-4, 3-6, 0-6 என, போலந்தின் மாக்ஸ் காஸ்னிகோவ்ஸ்கியிடம் தோல்வியடைந்தார்.

* பஞ்சாப் மாநிலம் லுாதியானாவில் நடந்த ‘ஐ-லீக்’ கால்பந்து போட்டியில் டைமண்ட் ஹார்பர் அணி 5-4 என்ற கோல் கணக்கில் நாம்தாரி அணியை வீழ்த்தியது.

* பீஹாரில் நடக்கும் ‘சப்-ஜூனியர்’ தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் தமிழக அணி 1-8 என்ற கோல் கணக்கில் ஜார்க்கண்ட் அணியிடம் தோல்வியடைந்தது. தமிழகம் அணிக்கு சஞ்சய் ஆறுதல் தந்தார்

Source link