பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை கடைசி நேரத்தில் புறக்கணித்துவிட்டு, இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பங்கேற்கச் செல்லும் வெளிநாட்டு வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
2026 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 28 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. அதே போல பாகிஸ்தான் நடத்தும் பிஎஸ்எல் (பாகிஸ்தான் சூப்பர் லீக்) மார்ச் 26 ஆம் தேதி தொடங்குகிறது.
ஐபிஎல் மற்றும் பிஎஸ்எல் தொடர்கள் இரண்டும் ஒரே சமயத்தில் நடைபெற இருப்பதால் வெளிநாட்டு வீரர்கள் பாகிஸ்தான் லீக்கை தவிர்த்துவிட்டு இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்தவகையில் இலங்கை அணி வீரர் தசுன் ஷனகா பிஎஸ்எல் தொடரில் இருந்து விலகி ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சாம் கரணுக்குப் பதிலாக ஆட இணைந்திருக்கிறார்.
தவிர குடகேஷ் மோட்டி, ஜேக் ஃபிரேசர் மெக்குர்க், ஒட்னியல் பார்ட்மேன் மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் போன்ற பல வெளிநாட்டு வீரர்களும் தனிப்பட்ட காரணங்களைக் கூறி பிஎஸ்எல் தொடரிலிருந்து விலகியிருக்கின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் (PCB)மொஹ்சின் நக்வி, ” பிஎஸ்எல் தொடரில் இருந்து விலகி ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் மீது நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம்.

கடந்த ஆண்டு பெஷாவர் சல்மி அணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட கார்பின் போஷ், கடைசி நேரத்தில் விலகி மும்பை இந்தியன்ஸ் அணிக்குச் சென்றார். அதற்காக அவருக்கு பிஎஸ்எல் தொடரில் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டது.
அதே போன்ற கடுமையான நடவடிக்கை இந்த முறையும் எடுக்கப்படும்” என்று தெரிவித்திருக்கிறார்.
