திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் பகுதியை சேர்ந்தவர் தனியார் நிறுவன ஆம்புலன்ஸ் ஓட்டுனரான ஆனந்த். ஆனந்தின் மனைவி அண்மையில் தாய் வீட்டிற்கு சென்ற நிலையில் கடந்த 9ஆம் தேதி ஆனந்த் இரவு பணிக்கு சென்று விட்டு மறுநாள் காலை காலை வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 15 சவரன் தங்க நகைகள், 500கிராம் வெள்ளி பொருட்கள், 50000ரூபாய் ரொக்கம், எல்இடி டிவி, சிலிண்டர் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது.
மேலும் ஆனந்தின் பக்கத்து வீட்டிலும் ஒரு சிலிண்டர் திருடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பொன்னேரி காவல் துறையினர் வழக்குப்பதிந்து அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
பொன்னேரி மகளிர் காவல் உதவி மையம் அருகே நடந்த தொடர் கொள்ளை சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் அம்பத்தூரை சேர்ந்த பாபு என்கிற பிஸ்டல் பாபு 26, ஒரகடம் சேர்ந்த சாய் சுரேஷ் 20 ஆகிய இருவரை பொன்னேரி காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 7.5 சவரன் தங்க நகைகளை மீட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒரு குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.
