சென்னை: தமிழகத்தில் ஓட்டுப்பதிவு நாளில் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் தேதிகளை தலைமை தேர்தல் கமிஷன் அண்மையில் அறிவித்தது. அதன்படி தமிழகத்திற்கு ஏப்.23ல் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடக்கிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு, அனைத்து கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் தேர்தல் கமிஷன் தீவிரமாக இறங்கி உள்ளது.
இந் நிலையில், தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நாளில் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அறிவித்து தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. வாக்களிக்க தகுதியுள்ள அனைவரும் தவறாது ஓட்டுப்போட வேண்டும் என்பதை முன்னிலைப்படுத்தும் விதத்தில் தேர்தல் கமிஷன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
முன்னதாக தமிழகம் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நாளான ஏப்.23ம் தேதி மாநிலம் முழுவதும் பொது விடுமுறை ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், கல்வி நிலையங்களுக்கு இந்த விடுமுறை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
