தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ; திமுகவுக்கு தமிழக காங்கிரஸ் கொடுக்கும் நெருக்கடி

சென்னை: திமுகவுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக, ஆட்சியில் பங்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, டில்லி தேசிய காங்கிரஸ் தலைமைக்கு, தமிழக காங்கிரஸ் கட்சியினர் கடிதம் எழுதியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் நாளுக்கு நாள் சலசலப்பு அதிகரித்து வருகிறது. திமுகவா, தவெகவா என்ற இரட்டை நிலைப்பாடு காங்கிரஸில் நிலவி வரும் நிலையில், கூட்டணி ஆட்சி என்ற முழக்கம் திமுகவுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. இருப்பினும், கடந்த டிசம்பர் மாதமே தொகுதி பங்கீடு நடத்த காங்கிரஸ் குழு அமைத்தது. ஆனால், குழு அமைத்து 2 மாதங்களாகியும், திமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்த முன்வராதது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் எம்பிக்கள், மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்பட மேலும் சில மூத்த தலைவர்கள், ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை வலியுறுத்தி, பொதுவெளியில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இது திமுகவுக்கு தர்மசங்கடமான சூழலை உருவாக்கியது. இதனை விரும்பாத முதல்வர் ஸ்டாலின், ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்திற்கு ஒத்துவராது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இதனால், திமுகவை காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். திமுகவினர் மரியாதை கொடுக்காவிட்டால் திருப்பி அடிப்போம் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூரும், பெண்களுக்கு ரூ.5000 கொடுத்தது தேர்தல் வெற்றிக்கு உதவாது என்று காங்கிரஸ் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தியும் பேசியது, கூட்டணியில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில், திமுகவுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் விதமாக, தமிழக காங்கிரஸ் கட்சியினர் டில்லி தலைமைக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்று வைரலாகி வருகிறது. அந்தக் கடிதத்தில், ஆட்சியில் பங்கு என்பதில் இருந்து பின்வாங்கக் கூடாது என்று தலைமைக்கு வலியுறுத்தியுள்ளனர். மேலும், வரும் சட்டசபை தேர்தலில் கூடுதல் தொகுதிகளை பெற வேண்டும், வாரியங்கள் முதல் கூட்டுறவு சங்கங்க வரையில் பங்கு கொடுக்க வேண்டும், உள்ளாட்சி தேர்தலில் கணிசமான இடங்களையும் காங்கிரஸூக்கு வழங்க வேண்டும் போன்ற 4 கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

இந்தக்கோரிக்கைகளுக்கு திமுக ஒத்துவருமா? என்பது சந்தேகம் தான். இருப்பினும், தமிழக காங்கிரஸாரின் இந்தக் கடிதத்திற்கு, டில்லி தலைமை எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதனிடையே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் நாளை (பிப்.,17) தமிழகம் வரும் நிலையில், இன்று மதியம் அவசர பயணமாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை டில்லி செல்ல இருப்பது குறிப்பிடத்தக்கது.

Source link