இந்நிலையில், அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் சோமசுந்தரம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அதிக வெப்பநிலை, சீரற்ற மழைப்பொழிவு, வானிலையில் ஏற்படும் அசாதாரண மாற்றங்கள், வைரஸ் கிருமிகள் பரவல் ஆகியவை டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் உற்பத்திக்கு காரணமாக உள்ளன. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு பாதிப்பு தீவிரமாக இருந்தது. உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத்துறையின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளின் காரணமாக கடந்த ஆண்டு பாதிப்பு விகிதமும், இறப்பு எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்தன. அதேபோல், நடப்பாண்டிலும் மேலும் குறைப்பதற்கு வழக்கமான மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க வேண்டும்.
அதன்படி, சுகாதார இணையதளத்தில் டெங்கு பாதிப்புகள் குறித்த விவரங்களை உடனுக்குடன் பதிவேற்ற வேண்டும். அப்போதுதான் உரிய நேரத்தில் தகவல்கள் கிடைத்து, டெங்கு பரவலைத் தடுக்க முடியும். நோய் பரப்பும் பூச்சிகள், கொசுக்களைக் கண்காணித்து, அதன் உற்பத்தியை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பரிசோதனை உபகரணங்கள் போதிய எண்ணிக்கையில் இருப்பு இருக்க வேண்டும். கொசு உற்பத்திக்கு இடமளிக்காத வகையில் வீடுகள், தொழில் நிறுவன வளாகங்களை பராமரிக்க வேண்டும். மேலும் பொதுமக்களிடம் டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
