தமிழகத்தில் 66 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் கட்டணம் உயர்வு

புதுடில்லி: தமிழகத்தில் மொத்தம் உள்ள, 77 சுங்கச் சாவடிகளில் 66ல், வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணங்களை மாற்றியமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. மற்ற சுங்கச்சாவடிகளுக்கான கட்டண உ யர்வு வரும் செப்டம்பர் மாதம் அமல்படுத்தப் படும்.

இந்த ஆண்டுக்கான கட்டண உயர்வு 5 முதல் 7 சதவீதம் வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், நாடு முழுதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் வகையில், ‘பாஸ்டேக்’ முறை 2016ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது, 2021ம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டது. இதில் கார், ஜீப் போன்ற தனியார் வாகனங்கள் அடிக்கடி பயன்படுத்துவதற்காக ஆண்டுக் கட்டண முறையை, கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

மத்திய அரசு தரவு களின்படி, இதுவரை சுமார் 11.86 கோடி பாஸ்டேக் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில், ஏறக்குறைய 5.9 கோடி பாஸ்டேக்குள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. தற்போது, ​​தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணத்தில், 98 சதவீதம் இந்த முறையிலேயே கிடைக்கிறது.

இதற்கிடையே, தமிழகத்தில், 66 சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம், வரும், ஏப்., 1ம் தேதி முதல் உயர்த்தப்படுகிறது. இதன்படி, தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தை விட கார், ஜீப், வேன் போன்ற வாகனங்களுக்கு 10 முதல் 40 ரூபாய் வரையும்; லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்களுக்கு 50 முதல் 200 ரூபாய் வரை கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதேபோல் மாதாந்திர பாஸ் கட்டணம், 300 முதல் 350 ரூபாய் வரை அதிகரிக்கப்பட உள்ளன.

இதற்கிடையே, நாடு முழுதும், வாகனங்களுக்கான ‘பாஸ்டேக்’ ஆண்டுக் கட்டணம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல், 3,000ல் இருந்து 3,075 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.

Source link