தமிழகம் எல்லா துறைகளிலும் ஆல் ரவுண்டர்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: தமிழகம் எல்லா துறைகளிலும் ஆல் ரவுண்டராக உயர்ந்துள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த கருத்தரங்கில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்துக்கான என்னுடைய கனவு என்பது தனிப்பட்ட ஸ்டாலினின் கனவு மட்டும் அல்ல. ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்பார்ப்புகளை உள்ளடக்கியது தான் எனது கனவு. நூற்றாண்டுக்கு முன் திராவிட இயக்கம் தொடங்கப்பட்டதிலிருந்து தமிழர்களுக்காக தொடங்கிய கனவு அதை நோக்கிய எங்கள் பயணத்தில் கடந்த 5 ஆண்டு காலம் என்பது பெரும் பாய்ச்சலை கண்டுள்ளது. அனைத்து பகுதிகளில் பரவலான, சமச்சீரான எல்லோருக்குமான வளர்ச்சியை எங்கள் திராவிட மாடல் ஆட்சியில் சாதித்து காட்டியுள்ளோம்.

ஆல் ரவுண்டர்

தமிழகத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் தங்களின் பகுதியில் வீடுகளில் எந்த அளவு முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை பார்க்கிறார்கள். அதற்காக தான் இங்கு திராவிட மாடல் ஆட்சிக்கான ஆதரவு அலை வீசுகிறது. எல்லோருக்குமான வளர்ச்சியை திராவிட மாடல் அரசு செய்து காட்டி இருக்கிறது. தமிழகம் எல்லா துறைகளிலும் ஆல் ரவுண்டராக உயர்ந்துள்ளது. மத்திய அரசின் நெருக்கடிகளை கடந்து வளர்ச்சி அடைந்துள்ளோம். இரட்டை இலக்கு பொருளாதார வளர்ச்சியை எட்டிய ஒரே மாநிலம் தமிழகம்.

3 கோடி மக்கள்

இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் நம்பர் ஒன் மாநிலம் என்று மத்திய அரசு பாராட்டுகிறது. மக்கள் சொல்லும் குறைகளை மட்டுமின்றி எதிர்க்கட்சிகள் கூறும் குறைகளையும் காது கொடுத்து கேட்டு சரி செய்கிறோம். ஒவ்வொரு துறையிலும் திராவிட மாடல் அரசு சாதனை படைத்து வருகிறது. புதிய தொழில் முதலீடுகள் மூலமாக முன்னணி நிறுவனங்களின் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலமாக 3 கோடி மக்கள் பயன்பெறுகின்றனர்.

உழைப்போம்

பெருநகரங்களுக்கு நடுவே அழகிய பூங்காக்களை அமைத்துள்ளோம். இரண்டாம் நிலை நகரங்களில் நியோ டைடல் பார்க் அமைத்து வருகிறோம். மாற்றுத் திறனாளிகளை உள்ளாட்சி அமைப்புகளை நியமனம் செய்து உள்ளோம். முத்திரை திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தும் மாநிலமாக வேறு எந்த மாநிலமும் இருக்காது. அடுத்த 5 ஆண்டுகளும் இதே மாதிரி உழைப்போம். சொல்ல சாதனைகள் இல்லாததால், மதுரை வந்த பிரதமர் மோடி பொய்யை அவிழ்த்துவிட்டிருக்கிறார். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

கருத்து சொல்லுங்க வாசகர்களே!

திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் எல்லா துறைகளிலும் ஆல் ரவுண்டராக உயர்ந்துள்ளது என்ற முதல்வரின் பேச்சு பற்றி உங்கள் கருத்துக்களை கமென்ட் செய்து சொல்லுங்க, வாசகர்களே!

Source link