தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி; மார்ச் 1ல் மதுரை; 6ல் வேலுாரில் பிரசாரம்

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை ஆதரித்து பிரசாரம் செய்ய, பிரதமர் மோடி வரும், 1ம் தேதி மதுரைக்கும், 6ம் தேதி வேலுாருக்கும் வருகிறார்.

தமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ஜ., – பா.ம.க., – அ.ம.மு.க., உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இக்கூட்டணி சார்பில், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் கடந்த ஜன., 23ல் பொதுக்கூட்டம் நடந்தது.

இதில் பிரதமர் மோடி பங்கேற்று, தே.ஜ., கூட்டணியின் தேர்தல் பிரசாரத்தை துவக்கி வைத்தார். இந்நிலையில், அடுத்தகட்டமாக, தே.ஜ., கூட்டணியை ஆதரித்து, வரும் மார்ச் 1ம் தேதி, மதுரையில் பிரதமர் மோடி பிரசாரம் செய்ய உள்ளார். அப்போது, திருப்பரங்குன்றம் முருகன் கோவிலிலும் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார்.

அதன்பின், மார்ச் 6ம் தேதி வேலுாரில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறுகையில், “ பிரதமர் மோடி தமிழக சட்டசபை தேர்தலுக்காக, அதிக நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே ஜன., 23ல், தமிழகம் வந்தார். மார்ச், 1, 6ல் வருவதும் உறுதியாகி விட்டது. தேர்தல் நெருக்கத்தில் கன்னியாகுமரி, சென்னை, கோவையில் பிரசாரம் செய்ய உள்ளார்,” என தெரிவித்தனர்.

Source link