புதுச்சேரியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்ற அவர், அங்கு நடைபெற்ற பிரம்மாண்ட ரோடு ஷோவில் பங்கேற்றார். பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு நேற்றிரவு மீண்டும் சென்னை திரும்பிய அவரை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், எல்.முருகன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதிக்குச் சென்ற பிரதமர் மோடி, கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்தார். அப்போது சில முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்புகள் மற்றும் கள நிலவரம் குறித்து அப்போது அவர் கேட்டறிந்தார்.
