தமிழக பா.ஜ., அமைப்பு பொதுச்செயலர் கேசவவிநாயகன் நீக்கம்

சென்னை: தமிழக பா.ஜ., அமைப்பு பொதுச்செயலர் பொறுப்பிலிருந்து கேசவவிநாயகன் நீக்கப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ்., மாநில சமுதாய நல்லிணக்க பொறுப்பாளராக, அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

‘சமன்வய பைட்டக்’ எனப்படும் சங் பரிவார் அமைப்புகளின் மாநில நிர்வாகிகளின் கூட்டம், சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைமை அலுவலகத்தில், நேற்று மாலை நடந்தது. இதில், பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ், ஆர்.எஸ்.எஸ்., தமிழகம், கேரளா அமைப்பாளர் ஹரி கிருஷ்ணன், மாநில அமைப்பாளர் பிரஷோபகுமார், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சட்டசபை தேர்தல்

தமிழக பா.ஜ., விவகாரங்கள் குறித்தும், சட்டசபை தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய ஆர்.எஸ்.எஸ்., தமிழகம் மற்றும் கேரளா அமைப்பாளர் ஹரி கிருஷ்ணன், ”கடந்த 10 ஆண்டுகளாக, பா.ஜ., மாநில அமைப்பு பொதுச்செயலர் பொறுப்பில் செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ்., மூத்த பிரசாரகர் கேசவவிநாயகன், மீண்டும் ஆர்.எஸ்.எஸ்., பணிக்கு திரும்புகிறார்.

”இனி, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தமிழக சமுதாய நல்லிணக்க பொறுப்பாளராக செயல்படுவார்,” என அறிவித்தார். ஆர்.எஸ்.எஸ்., மாநில அமைப்பாளராக இருந்த கேசவ விநாயகன், கடந்த 2015 மார்ச் 15ம் தேதி, தமிழக பா.ஜ., இணை அமைப்புப் பொதுச்செயலராக நியமிக்கப்பட்டார். பின், 2015 நவம்பர் 27ம் தேதி, பா.ஜ., மாநில அமைப்பு பொதுச்செயலராக அறிவிக்கப்பட்டார்.

போஸ்ட் கார்டு

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, அப்பொறுப்பில் இருந்த அவர், 2016, 2021 சட்டசபை, 2019, 2024 லோக்சபா தேர்தல்கள் என, நான்கு பொதுத் தேர்தல்களுக்காக, தமிழக பா.ஜ.,வில் முக்கிய முடிவுகளை எடுப்பவராக இருந்தார். பா.ஜ.,வைப் பொருத்தவரை, அமைப்புப் பொதுச்செயலர் பதவி என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.

கட்சியின் அமைப்புப் பணிகள் அனைத்தும், அவரின் கட்டுப்பாட்டில் இருக்கும். இப்பொறுப்புகளில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் அனுபவம் வாய்ந்த முழுநேர ஊழியர்கள் நியமிக்கப்படுவது வழக்கம்.

கேசவவிநாயகன் மாற்றப்பட்டது குறித்து, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியர் என்பவர், முகவரி எழுதப்படாத போஸ்ட் கார்டு போன்றவர். அவர் எந்த முகவரிக்கு, அதாவது எந்தப் பணிக்கு அனுப்பப்படுகிறாரோ, அந்தப் பணியில் பணியாற்ற வேண்டும்.

‘அந்த வகையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பா.ஜ.,வில் இருந்த கேசவவிநாயகன் மீண்டும் ஆர்.எஸ்,எஸ்., பணிக்கு திரும்பியுள்ளார். ‘அவர் அமைப்பு பொதுச்செயலராக பணியாற்றிய காலத்தில், தமிழக பா.ஜ., பல்வேறு விஷயங்களுக்காக, மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது’ என்றார்.

Source link