'தமிழக பா.ஜ.,வில் இருக்கும் நிர்வாகிகள் போதாது என்று, தேர்தல் நேரத்தில் பல்வேறு பிரிவுகளுக்கும் மாநில

‘தமிழக பா.ஜ.,வில் இருக்கும் நிர்வாகிகள் போதாது என்று, தேர்தல் நேரத்தில் பல்வேறு பிரிவுகளுக்கும் மாநில செயலர்கள் என 22 பேரை அறிவித்துள்ளதால் குழப்பமே மேலிடும்’ என மாவட்ட, மண்டல் நிர்வாகிகள், தொண்டர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

தமிழக பா.ஜ.,வில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் நீண்ட இழுபறிக்கு பின்பே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டனர். தன் ஆதரவாளர்கள் இல்லை என பல ‘முன்னாள்’கள் புலம்பும் வகையில் அந்த அறிவிப்பு வெளியானது.

அதன்பின் ஒருவழியாக கட்சி செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கையில், சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, விரும்பிய எண்ணிக்கையில் தொகுதிகளை பெறுவதில் நடந்த பேரம் நீண்டது. ஆளாளுக்கு 60, 40 எனப் பேசி ஒருவழியாக பா.ஜ.,வுக்கு27 தொகுதிகள் என முடிவுக்கு வந்தது.

மேலும் சில கட்சிகளுக்கு தாமரை சின்னம் வழங்கிய வகையில்,35 வரை சென்றுள்ளது. இதன்பின் 27 சீட்களில் வேட்பாளர்களை அறிவிப்பதில் குழப்பமோ குழப்பம்.


திடீர் நிர்வாகிகள்

ஒருவழியாக எல்லாம் முடிந்து வேட்பு மனுதாக்கல் நடக்கிறது. கடைசி நாளான இன்று பலரும் மனுதாக்கல் செய்ய உள்ளனர். தொடர்ந்து பிரச்சார ஏற்பாடுகளும் நடக்கின்றன.

இந்நிலையில், நிர்வாகிகளிடையே குழப்பம் ஏற்படுத்தும் வகையில் பா.ஜ.,வின் பல்வேறு பிரிவுகளுக்கும் புதிய மாநில செயலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவராக தாளை முத்தரசு, செயலராக விஜயகுமார், மருத்துவப் பிரிவு மாநில செயலராக அன்பரசன், வர்த்தக பிரிவு மாநில செயலர்களாக கிச்சா ரமேஷ், அருண்ராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் உள்ளாட்சி பிரிவு, ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பிரிவு, அரசு தொடர்பு பிரிவு, அமைப்புசாரா தொழில் பிரிவு, ஆன்மிகம், கோவில் மேம்பாட்டு பிரிவு, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு, கூட்டுறவு பிரிவு, தன்னார்வ தொண்டு நிறுவன பிரிவு, தமிழ் இலக்கியம், தமிழ் வளர்ச்சி பிரிவு, கலை, கலாசார பிரிவு, நெசவாளர் பிரிவு, பொருளாதார பிரிவு, தேசிய மொழிகள் பிரிவு, விளையாட்டு, திறன் மேம்பாட்டு பிரிவு, தொழில்துறை வல்லுநர்கள் பிரிவு என பலவற்றிலும் மாநில செயலர்களை நியமித்துள்ளனர்.

குழப்பம், வருத்தம்

இவர்களின் நியமனம் குறித்து யாரிடமும் கருத்துக் கேட்கவில்லை. இதனால் பிரச்சாரத்தில் இருக்கும் மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் திடீரென குதித்த மாநில செயலர்களால் தவிப்பில் உள்ளனர்.

பா.ஜ.,வினர் கூறுகையில் ‘மாநில தலைவராக அண்ணாமலை இருந்தபோது கூட இப்படி செய்ததில்லை. பா.ஜ., நிர்வாக ரீதியாக ஏற்கனவே தள்ளாடும் போது, தேர்தல் நேரத்தில் இதுபோன்ற அறிவிப்புகள் தேவையில்லை.

‘ஏற்கனவே உள்ள நிர்வாகிகளின் வழிகாட்டலில் தேர்தல் வேலைகள் நடக்கும்போது, இந்த திடீர் செயலர்களும் தங்கள் அதிகாரத்தைக் காட்டுவர். இதனால், குழப்பங்களும் வருத்தமும்தான் ஏற்படும்’ என்றனர்.

Source link