தமிழ்நாடு 'வக்ப்' வாரியம் செயல்பட அனுமதி: ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை

தமிழ்நாடு வக்ப் வாரியம் செயல்பட சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை, நிறுத்தி வைப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வக்ப் சட்டப்படி, வாரியத்தில் முஸ்லிம் அல்லாத உறுப்பினர்கள் நியமிக்கப்படுவது அவசியம். இந்நிலையில், இந்த சட்டத்தை பின்பற்றாமல் தமிழ்நாடு வக்ப் வாரியத்தில் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதாக, வழக்கறிஞர் சவுகத் அலி முகமது என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், ‘வக்ப் சட்டப்படி, வாரியத்தில் இடம் பெறும் மொத்த உறுப்பினர்களில், இருவர் முஸ்லிம் அல்லாதவர்களாக இருக்க வேண்டும். மாநில பார் கவுன்சிலில் இருந்து ஒரு உறுப்பினர் நியமிக்கப்பட வேண்டும்.

‘ஆனால், அந்த விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை. எனவே, உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும், வாரியம் எடுக்கும் முடிவுகள் செல்லாது என அறிவிக்க வேண்டும்’ என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த மாதம் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, தமிழ்நாடு வக்ப் வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ”வக்ப் சட்டத்தின்படி, வாரியத்தில் எட்டு பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூன்று பேர் நியமிக்கப் படவுள்ளனர்.

”தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தல் நடந்து வருவதால், அதற்கு பிறகே, எஞ்சிய உறுப்பினர்களை நியமிக்க முடியும். எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை நீக்க வேண்டும்,” என வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை நிறுத்தி வைப்பதாக உத்தரவிட்டது. மேலும், ‘தமிழ்நாடு வக்ப் வாரியத்திற்கு நியமிக்கப்படவுள்ள மூன்று உறுப்பினர்கள் யார் என்பதை அடுத்த விசாரணையின்போது உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்’ எனக் கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.

– டில்லி சிறப்பு நிருபர் –

Source link