விருதுநகரில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.
அதன்படி திருச்சுழி தொகுதி வேட்பாளர் தங்கம் தென்னரசு, அருப்புக்கோட்டை தொகுதி வேட்பாளர் சாத்தூர் ராமச்சந்திரன், சாத்தூர் தொகுதி வேட்பாளர் கடற்கரைராஜ், ராஜபாளையம் தொகுதி வேட்பாளர் தங்கப்பாண்டியன், சிவகாசி காங்கிரஸ் வேட்பாளர் அசோகன், விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன், ஸ்ரீவில்லிபுத்தூர் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மகாலிங்கம் உள்ளிட்டோரை அறிமுகம் செய்து வாக்கு சேகரித்தார்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “திருச்சுழி தொகுதி வேட்பாளரும், எனது சகோதரரும், தலைவர் கலைஞரின் அன்புத் தூணுமான தங்கம் தென்னரசு ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர். தமிழ்நாட்டின் நிதித்துறையை தலைநிமிரச் செய்த பெருமைக்குரியவர். அவரை எதிர்கொள்ளக்கூட எதிர்க்கட்சியினர் தயங்குகிறார்கள் என்ற செய்தி வருகிறது. அந்த அளவுக்கு வலிமையான வேட்பாளர் தங்கம் தென்னரசு. எனவே, உதயசூரியன் சின்னத்தில் அவருக்கு நீங்கள் அனைவரும் மீண்டும் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.
நம்மில் பலருக்கு சிவகாசி என்றால் பட்டாசு, சாத்தூர் என்றால் பலகாரம், விருதுநகர் என்றால் பரோட்டா, ஸ்ரீவில்லிபுத்தூர் என்றால் பால்கோவா, தீப்பெட்டி, காலண்டர் என அத்தனையும் தனித்துவமானது. உங்கள் உழைப்பினால்தான் இந்த மாவட்டத்தை ‘குட்டி ஜப்பான்’ என்று அழைக்கிறார்கள். மொத்தத்தில் சுறுசுறுப்புக்கும், கடின உழைப்புக்கும் பெயர் பெற்ற மக்கள் வாழும் மாவட்டம் தான் விருதுநகர்.
அப்படிப்பட்ட விருதுநகர் மக்களை நாடித்தான் நான் இங்கு வந்திருக்கிறேன். ஓய்வு இல்லாமல் உழைக்கும் உங்களைப் பார்த்து, நானும் என்னை புதுப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு வந்திருக்கிறேன்.
விருதுநகர் என்றால் வீர தியாகி சங்கரலிங்கனார் நினைவுக்கு வராமல் இருக்க முடியாது. அதுபோல ஈரோடு என்றால் தந்தை பெரியார், காஞ்சி என்றால் பேரறிஞர் அண்ணா, திருவாரூர் என்றால் தலைவர் கலைஞர் என்பது போல, விருதுநகர் என்றால் பெருந்தலைவர் காமராஜர்.

அரசியல் கடந்து தனிப்பட்ட முறையில் காமராஜர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும், எனது திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்திய ஐயா காமராஜரை நான் எப்போதும் மறக்க முடியாது. பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15 கல்வி வளர்ச்சி நாள் என்று தலைவர் கலைஞர் அறிவித்ததை நாம் இன்றும் கடைப்பிடித்து வருகிறோம். இது தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக் கண்ணைத் திறந்த பச்சைத் தமிழர் காமராஜரின் மண்.
தமிழ்நாட்டின் பல பகுதிகளுக்கும் பிரச்சாரத்திற்காகச் சென்றபோது, மக்கள் அனைவரும் திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்று முடிவு செய்துவிட்டதை அறிய முடிகிறது. நீங்களும் அதே எண்ணத்தில் இருந்தால், இங்கே நிற்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை அமோக வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனக் கூறினார்.
