ஆனால் அன்றே ‘விகடன்’ இணையதளத்தில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தார்கள். அதில், சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே ரேஷன் கடைகளில் கோதுமை, மைதா, சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகம் நிறுத்தப்பட்டுவிட்டது.
சிவப்பு நிற அட்டைக்கு 20 கிலோ, மஞ்சள் நிற அட்டைக்கு 10 கிலோ என்று அரிசி மட்டும் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. அதுவும் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆளுநராக இருந்த கிரண் பேடி அவர்கள், அரிசி கொள்முதலில் மிகப்பெரிய முறைகேடு நடைபெறுவதாகக் கூறி, அரிசிக்குப் பதிலாக வங்கிக் கணக்கில் மக்களுக்குப் பணம் செலுத்துவதற்கு உத்தரவிட்டார்.
ரேஷன் கடை என்று முறையாக இருந்த இடங்களுக்குப் பல ஆண்டுகளாக வாடகை செலுத்தவில்லை. அதனால் அந்தக் கட்டிட உரிமையாளர்கள் கடையைப் பூட்டிவிட்டனர்.

ஆங்காங்கே பள்ளிகளில் வைத்துதான் அரிசி மட்டும் வழங்குகிறார்கள். அதுவும் இப்போதுதான் சில காலமாக வழங்கப்படுகிறது. அதைவிட இன்னொன்றையும் குறிப்பிட்டிருந்தார்கள். ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியமும் வழங்கப்படவில்லை என்று சொல்லப்பட்டிருந்தது.
‘விஜய் தெரியாமல் கூறுகிறார்’ என்று அமைச்சர்கள் முதல் அரசாங்கத்தில் இருப்பவர்கள் வரை அனைவரும் கூறினீர்கள் அல்லவா? இப்போது விகடன் கூறியதற்கு என்ன பொருள் என்று அந்த மாண்புமிகு மனிதர்கள் பதில் கூற முடியுமா?
மக்கள் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லத்தான் துணிச்சல் வேண்டும். இங்கு ஏற்கெனவே அரசியலில் இருப்பவர்களுக்கு மக்களுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. கூட்டணி அது இது என்று கூறி மக்களை ஏமாற்றத்தான் பார்க்கிறார்கள். அதனால்தான் மக்கள் சார்பாக நாம் வந்து கேட்ட உடனே கோபப்படுகிறார்கள்” என்றார்.
