தலைமறைவான ஆயுள் கைதி; காஸ் புக் செய்ததால் சிக்கிய சம்பவம்

பஞ்சாப் மாநிலம் பாசில்கா மாவட்டம் அபோஹர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப் தோமர். ராணுவ கேப்டனான  சந்தீப், தனது மனைவி ஸ்வேதா சிங்குடன் வாழ்ந்து வந்தார். இந்த தம்பதியினருக்கு இடையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த 2013 ஆம் ஆண்டு சந்தீப் தனது மனைவியைக் கொலை செய்தார். பின்பு, மனைவி தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடினர்.  எனினும் இது தொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.  

தொடர்ந்து காவல்துறை நடத்திய விசாரணையில், அது தற்கொலையல்ல. திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட படுகொலை என்பது கண்டறியப்பட்டது. பின்பு, சந்தீப்பை காவல்துறையினர் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கில், நீதிமன்றம் சந்தீப்பை குற்றவாளி என உறுதி செய்து, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. 2014 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இந்த தண்டனையையடுத்து, அவருக்குக் கடந்த 2019 ஆம் ஆண்டு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.  

இதை எதிர்த்து ஸ்வேதா சிங்கின் தந்தை மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரணை செய்த உயர் நீதி மன்றம், அவரது ஆயுள் தண்டனையை உறுதி செய்ததுடன், ஜாமினையும் ரத்து செய்தது. இதையடுத்து, காவல்துறையினர் சந்தீப்பைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட இருந்த வேளையில், சந்தீப் தலைமறைவானார்.  

இதையடுத்து, சந்தீப்பை கைது செய்யக்கோரி ஸ்வீதா சிங்கின் தந்தை மனுத்தாக்கல் செய்தார். இந்த விசாரணையில், சந்தீப்பை கைது செய்ய மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தான அறிக்கையைத் தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, சந்தீப்பை கைது செய்ய காவல்துறை தனிப்படை அமைத்துத் தேடிவந்தது. 

இந்நிலையில், சந்தீப்பின் பான் என்னுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக்கணக்குகளை காவல்துறையினர் ஆராய்ந்தனர். அப்போது, அந்த எண்ணில் காஸ் சிலிண்டர் புக் செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இந்த பரிவர்த்தனையை ஆராய்ந்த காவல்துறையினர், காஸ் புக் செய்யப்பட்ட இடத்தினையும் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, சந்தீப் பாண்டுர்னா பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. பின்பு, காவல்துறையினர் அவரை கையும் களவுமாக மடக்கிப் பிடித்தனர். இதையடுத்து, அவரை காவல்துறையினர் உயர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர்.  

Source link