ஜென் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நீ Forever’. நாளைய இயக்குநர் 6வது சீசன் டைட்டில் வின்னர் சுதர்ஷன் கோவிந்த் நாயகனாக நடிக்க, மிஸ் தென்னிந்தியா 2016 பட்டம் வென்ற கேரள அறிமுக நடிகை அர்ச்சனா ரவி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன், ஒய் ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே.ஸ்ரீராம், ரெத்திகா ஸ்ரீனிவாஸ், செல்லா, பிருந்தா, டாக்டர்.வித்யா, பிரதோஷ், சினேகா சக்தி, மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். அஸ்வின் ஹேமந்த் இசையமைத்துள்ள இப்படம் இன்று வெளியாகியுள்ளது.
முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்த போது நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன், மேடையில் தனது பேச்சை முடித்துவிட்டு உடனே கிளம்பியிருந்தார். இது குறித்து நேற்று நடந்த படத்தின் செய்தியாளர்களின் சந்திப்பில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எனக்கு நாடக ஒத்திகை இருந்தது. அதனால் சென்று விட்டேன்” என்றார். உடனே அந்த கேள்வி கேட்ட செய்தியாளர், ரஜினி குறித்து தவெக ஆதவ் ஆர்ஜூனா பேசியது தொடர்பாக கேள்வி கேட்கப்படும் என்ற அச்சத்தில் கிளம்பி போய்விட்டீர்களா என்ற கேள்வியை முன்வைத்தார். அதற்கு சற்று கோபத்துடன் பதிலளித்த மகேந்திரன், “அந்த கேள்வியை கேட்டிருந்தால் கூட எனக்கு தெரியாது என சொல்லியிருப்பேன். அதற்கு எவளோ நேரம் ஆகப்போகிறது.
நீ ஃபாரெவர் படத்தை பற்றி பேசுவதாக இருந்தால் பேசலாம். தவெக தவக்களை பற்றிலாம் பேச வேண்டாம். அதற்கு இன்னொரு அரங்கம் வையுங்கள். அப்போது பேசுகிறேன். கல்யாணம் நடக்கும் இடத்தில் டைவர்ஸை பற்றி பேசலாமா” என்றார்.
