பாடலாசிரியர் மோகன் ராஜன், “இந்தப் பாடலைப் பற்றி சொல்வதற்குப் பெரிய சம்பவமொன்று இருக்கிறது. இளையராஜா சாரின் 1000-வது படம் ‘தாரை தப்பட்டை’. இந்தப் படத்தில் நானும் ஒரு பங்காக இருந்திருப்பதில் எனக்கு கர்வம்!
இப்படியானவொரு வாய்ப்பு எனக்கு இனி அமையுமா என எனக்குத் தெரியவில்லை. அதனால்தான் நான் கர்வம் கொள்கிறேன் என அன்பாகச் சொல்கிறேன். இளையராஜா சாரின் முதல் திரைப்படமான ‘அன்னக்கிளி’ படத்தை தேவராஜ் – மோகன் என இருவர் இயக்கினார்கள். அவருடைய முதல் திரைப்படத்திலும் மோகன் என்கிற பெயரைக் கொண்ட ஒருவர் இருந்திருக்கிறார்.
அவருடைய 1000-வது படத்தில் மோகன் ராஜ் என்கிற பெயரில் நானும் ஒரு பங்காக இருந்தேன். இப்படி நானாகவே ஒப்பிட்டு பார்த்துக் கொண்டேன். இந்தப் பாடலுக்கு முன்பு நான் வாய்ப்பு தேடி இளையராஜா சாரின் ஸ்டுடியோவுக்கு ஒரு முறை சென்றேன். அப்போது அவர் பிரசாத் ஸ்டுடியோவில் இருந்தார்.
அப்போது அங்கிருந்தவர்கள், இயக்குநரோடு வந்தால்தான் இளையராஜா சாருக்கு பாடல் எழுத முடியும் எனச் சொல்லிவிட்டார்கள். ஆனால், என்னை பாலா சார்தான் ராஜா சார் ஸ்டுடியோவுக்குள் கூட்டிச் செல்வார் என அந்த நேரத்தில் நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை” என்றார்.
