குடியாத்தம்: தார் சாலை பணிகளுக்காக ஒப்பந்ததாரர் பாலாற்றில் மணல் அள்ளுவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த உள்ளி பஞ்சாயத்திற்குட்பட்ட வட்டுவாம்பட்டியில், தார் சாலை அமைக்கும் பணி நடக்கிறது. சாலைகளின் இருபுறமும் மணல் அணைக்க, சட்ட விரோதமாக பாலாற்றில் மணல் கடத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
தமிழ கத்தில் பாலாற்றில் மணல் அள்ள தடை உள்ளது. ஆனால், வட்டுவாம்பட்டி பாலாற்றில் சட்டவிரோதமாக ஒப்பந்ததாரர் டிராக்டர் வாயிலாக கடந்த சில நாட்களாக மணல் அள்ளுகிறார்.
இதனால், பாலாற்றின் கரைகள் பலமிழந்து, மழை காலங்களில் தண்ணீர் ஊருக்குள் புகும். எனவே, பாலாற்றில் மணல் அள்ளிய ஒப்பந்ததாரரின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து ஒப்பந்ததாரரிடம் கேட்டபோது, ‘தடுப்பு சுவர் பணிகளுக்காக நான்கு வண்டியில் மணல் அள்ளினோம். தற்போது எம்.சாண்ட் மணல் தான் பயன்படுத்துகிறோம்.
‘சாலை பணிகளுக்கு பாலாற்று மணல் பயன்படுத்தவில்லை. அதிகாரிகள் ஆய்வுக்கு பின், தடுப்பு சுவர் பணிகளுக்கு மணல் அள்ளப்படவில்லை’ என்றார்.
