2026 தேர்தலிலும் ‘அண்ணா நகர்’ தொகுதியைக் குறிவைத்தே கோகுல இந்திரா வேலை செய்து வருகிறார். இந்நிலையில், திமுக முகாமில் அண்ணா நகர் தொகுதிக்கு வேட்பாளர் மாற்றம் இருக்கப்போகிறது என்கின்றனர். சிட்டிங் எம்.எல்.ஏ மோகன் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு போட்டியிட விருப்ப மனுவே தாக்கல் செய்யவில்லை என்கின்றனர்.
தனக்கு பதில் தன்னுடைய மகன் ‘அண்ணா நகர்’ கார்த்திக் தொகுதியில் போட்டியிட வேண்டுமென மோகன் விரும்புகிறார். ஐ.டி.விங்கின் மாநில துணைச் செயலாளராக இருக்கும் கார்த்திக் முதல்வரின் குடும்பத்துக்கு நெருக்கமானவர்.

குறிப்பாக, ‘மாப்பிள்ளை’ சபரீசனின் உற்றத் தோழன். தந்தையின் விருப்பப்படி களத்தில் இறங்கினால் சீட் உறுதி என்கிற எண்ணத்தில் கார்த்திக்கும் தொகுதியில் வேலையைத் தொடங்கிவிட்டார். தொகுதியில் ‘பட்டா’ இல்லாத இடங்களுக்கு பட்டா வாங்கிக் கொடுப்பது, பள்ளிகளைப் புனரமைப்பது, கோவில் திருப்பணிகள் எனத் தொகுதிக்குள் சுற்றி சுழன்று வேலை பார்க்கிறார்.
சமீபத்தில் பொங்கல் பரிசாக தொகுதியின் திமுக நிர்வாகிகளுக்கும் மக்களுக்கும் பைக், செல்போன், எர் கூலர், மிக்ஸி, கிரைண்டர், பாத்திர செட் என யாரையும் தவறவிடாமல் கொடுத்திருக்கிறார்.
தொகுதியை 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று கொடுப்பேன் என்றும் கார்த்திக் பல இடங்களில் பேசி வருகிறார் கார்த்திக்.
