திமுக வாக்குகளில் பெரும்பங்கு தவெகவுக்கு செல்லும்; அன்புமணி கணிப்பு

சென்னை: திமுக வாக்குகளில் பெரும்பங்கு நடிகர் விஜயின் தவெக கட்சிக்குச் செல்லும் என்று எதிர்பார்ப்பதாக பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.

சென்னையில் அவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி விவரம்;

சென்னையில் பாமக இளைஞரணி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக அரசை எதிர்த்தும், அதிமுக கூட்டணியை ஆதரித்தும் தீர்மானங்களை நிறைவேற்றி இருக்கிறோம். கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தில் மோசமான நிர்வாகம் நடக்கிறது. இதுவரை 12 முதல்வர்கள் மாநிலத்தை ஆண்டுள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகள், தொழிலதிபர்களால் சூழப்பட்டு இருக்கிறார். சமூக நீதி குழி தோண்டி புதைக்கப்பட்டு உள்ளது. இவை அனைத்திற்கும் அடிப்படை காரணம் ஊழல், வசூல் மற்றும் கமிஷன். பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை. மாநிலத்தில் எங்கு பார்த்தாலும் போதை பொருள் கலாசாரம் பரவி இருப்பதே திமுக அரசின் தோல்வியை காட்டுகிறது.

தமிழகத்தில் 7000 கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன. வேளாண் வளர்ச்சியில் முன்னேற்றமில்லை. அவரின் வெற்றுத் திட்டங்கள் மக்களை சென்றடையாது. எதிர்க்கட்சிகள் சிதறி இருந்ததால் திமுக தேர்தலில் எளிதாக வெற்றி பெற்றது.

ஆனால், இன்று எதிர்க்கட்சிகள் வலிமையான கூட்டணியாக மாறி இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தோல்வி அடைந்துவிட்டார். சட்டசபை தேர்தலில் திமுக ஒற்றை இலக்க இடங்களையே பிடிக்கும். எங்கள் கூட்டணியானது 200க்கும் அதிகமான தொகுதிகளை வெல்லும்.

திமுக அரசு மீது மக்கள் கோபமாக உள்ளனர். எனது கட்சி விவகாரத்தில் தலையிட்டதால் நானும் மிகுந்த கோபமாக இருக்கிறேன். குழப்பத்தை ஏற்படுத்தி எதிர்க்கட்சிகளை பிரிக்கும் வேலையை செய்கின்றனர். பாமகவை உடைக்க முடியாது. முன் எப்போதும் இல்லாததை விட இப்போது நாங்கள் பெரும் எழுச்சியை பெற்றிருக்கிறோம்.

இம்முறை திமுகவின் வாக்குகளில் பெரும்பங்கானது தவெகவுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கிறேன். இது எங்கள் கூட்டணிக்கு ஒரு பெரும் வெற்றியை தரும். திமுக மிக பெரும் தோல்வியை சந்திக்கும்.

இவ்வாறு அன்புமணி பேட்டியளித்தார்.

Source link