தமிழ்நாடு அரசியல் களத்தில் திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. முதல்வர் ஜோசப் விஜய் ராஜினாமா செய்த இந்த தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பாக யார் போட்டியிட போகிறார்கள் என்பது குறித்து தொடர்ச்சியாக பல விவாதங்கள் நடந்து வருகிறது. இதில் பலருடைய பெயர்களும் அடிப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருச்சி கிழக்கு இடைத்தேர்தல் குறித்து சகாயம் ஐஏஎஸ் பேசியுள்ளது கவனம் ஈர்த்து வருகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவரான விஜய் சென்னையில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த இரண்டு இடத்திலும் அவர் வெற்றி பெற்ற நிலையில் பெரம்பூர் தொகுதியை தக்க வைத்து, திருச்சி கிழக்கில் ராஜினாமா செய்தார். இதனை தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலுக்காக பரபரப்புரை செய்தார் விஜய். இதனையடுத்து தவெக சார்பாக அங்கு யார் களமிறங்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
முன்னதாக இங்கு தவெக சார்பாக நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து விஜய்யின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி, சகாயம் ஐஏஎஸ் ஆகியோரின் பெயர்களும் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தவெக போட்டியிட போவதாக அடிப்பட்டது. இதற்கிடையில் சகாயம் ஐஏஎஸ் போட்டித் தேர்வு மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கும் கூட்டத்தில் பங்கேற்று பேசியுள்ளது கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது.
அதாவது இது தொடர்பாக அவர் பேசுகையில், சகாயம் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட போகிறார் என்று பேசுகிறார்கள். நான் திருச்சி கிழக்கில் நிற்க போகிறேனா என்பதெல்லாம் பிரச்சனை கிடையாது. டிஎன்பிஎஸ்சி தேர்வில் தொகுதிக்கு ஒருவர் வெற்றி பெற வேண்டும். நீ தொகுதி ஒன்றில் வெற்றி பெற போகிறாயா என்பதுதான் பிரச்சனை என தெரிவித்துள்ளார். அதோடு நீ என்னுடைய வெற்றியை பற்றி எல்லாம் கவலைப்படுகிறாய்.
நான் எந்த தொகுதி என்பதை பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டாம் என்று பேசியுள்ளார். அவருடைய இந்த கருத்து தற்போது சோஷியல் மீடியாவில் தற்போது கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது. முன்னதாக தவெக சார்பாக திருச்சி கிழக்கில் சகாயம் ஐஏஎஸ் போட்டிட போகிறார். அவர் வெற்றி பெற்றார் அமைச்சரவையில் இடம் கொடுக்கவும் முதல்வர் விஜய் திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் பரவி பெரியளவில் இணையத்தில் வைரலாகி வந்தது.
இதனையடுத்து சமீபத்தில் மாற்றுக்கட்சியை சார்ந்தவர்கள் தவெகவில் இணைவதை விமர்சனம் செய்திருந்தார் ஐஏஎஸ் சகாயம். குறிப்பாக குட்கா முறைகேடு, சிபிஐ விசாரணை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குகளை எதிர்க்கொண்டு வரும் முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரை தவெகவில் இணைப்பதால், முதல்வர் விஜய் மக்களிடையில் கட்டியெழுப்பிய நம்பிக்கையை சீர்குலைத்து விடும் என கவலை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது திருச்சி கிழக்கில் நான் போட்டியிடுகிறேனா என்பதெல்லாம் பிரச்சனை கிடையாது என ஐஏஎஸ் சகாயம் கூறியுள்ளார். இதற்கிடையில் திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தான் போட்டியிட போவது இல்லை என்பதை உறுதிப்படுத்தினார். இதனை தொடர்ந்து தனிக்கட்சி துவங்கும் முடிவில் ராகவா லாரன்ஸ் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
