திருச்சி: முதல்வர் ஸ்டாலின் தோல்வி பயத்தில் உச்சத்தில் இருக்கிறார் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நிருபர்கள் சந்திப்பில் எல்.முருகன் கூறியதாவது: திருச்சியில் நடைபெற உள்ள தேஜ கூட்டணி பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். முதல்வர் ஸ்டாலின் தோல்வி பயத்தில் உச்சத்தில் இருக்கிறார். எப்பொழுது தேர்தல் நடந்தாலும் முதல்வர் தோல்வி அடைவது நிர்ணயிக்கப்பட்ட ஒன்று. அவர் ஆட்சியில் இருக்கிறார். அவருக்கு சர்வே எல்லாம் வந்து இருக்கும். அதனால் அவருக்கு தோல்வி என்பது உறுதியான ஒன்று. அவர் தோல்வி பயத்தில் கண்டதையும் பேசி கொண்டு இருக்கிறார்.
கண்டிக்கத்தக்கது
நேற்றைக்கு மேற்குவங்கத்தில் நடந்த சம்பவம் மிகவும் கண்டனத்துக்குரியது. ஜனாதிபதிக்கு மரியாதையை திமுக, காங்கிரஸ் இணைந்து இருக்கும் இண்டி கூட்டணியில் உள்ள திரிணமுல் காங்கிரஸ் அரசு கொடுக்கவில்லை. ஜனாதிபதி வரும் போது முதல்வர் போய் வரவேற்க வேண்டும் அல்லது அமைச்சர் வரவேற்க சென்று இருக்க வேண்டும்.
ஒரு அமைச்சரும் போகவில்லை. ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்ற நிகழ்ச்சியில் முழுமையான ஏற்பாடுகளை போலீசார் செய்யவில்லை. மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஜனாதிபதி என்பவர் மிகவும் பின் தங்கிய பழங்குடியின இனத்தை சார்ந்தவர். அவர் மிகப்பெரிய தலைவராக வந்து இருக்கும் போது, அவர்களை இழிவுபடுத்தும் வகையில் முதல்வர் மம்தாவின் செயல், இண்டி கூட்டணியின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
விஜய் இலவசங்கள் இல்லை என்று சொன்னார். தற்போது இலவசங்களை அறிவிக்கிறார். அவர் முதல்முறையாக அரசியலுக்கு வந்து இருக்கிறார். முதல் தேர்தல். அவர் எந்த வித தாக்கத்தை ஏற்படுத்துவார், ஓட்டுக்களை பெறுவார் என்பது தெரியாது. சிரஞ்சீவியின் கூட்டத்தை நாம் பார்த்தோம். அந்த கூட்டம் என்ன ஆனது?
தேஜ கூட்டணி
விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கும் போது என்ன கூட்டம் இருந்தது. அது எல்லாம் இன்றைக்கு எங்கே இருக்கிறது? சினிமா நடிகர்களை பார்க்க வரும் கூட்டம் வேறு, அரசியல் நோக்கத்துடன் பார்க்கும் கூட்டம் வேறு. சினிமா ரசிகர்கள் அனைவரும் அரசியலில் ஓட்டு போடுவார்கள் என்பது எல்லாம் தமிழகத்தில் எம்ஜிஆர் காலத்துடன் முடிந்துவிட்டது.
கூட்டணி குறித்து எல்லாம் தேசிய தலைமை சொல்வார்கள். தற்போது தேஜ கூட்டணி தான் வலிமையாக இருக்கிறது. எங்கள் கூட்டணியில் 30க்கும் மேற்பட்ட கட்சிகள் இருக்கின்றனர். எங்கள் கூட்டணி திமுகவை விட முன்னோக்கி வேகமாக பயணித்து கொண்டு இருக்கிறது. இவ்வாறு எல்.முருகன் கூறினார்.
