புதுடில்லி: திருப்பதி கோவிலில் வழங்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளது.
ஆந்திராவில் முந்தைய ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், திருப்பதி லட்டுகளில் விலங்கு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக, கடந்த 2024 செப்டம்பரில் முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டிஇருந்தார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் தலைவர் நாயுடு, இது தொடர்பாக அளித்த விளக்கத்தில், 60 லட்சம் கிலோ கலப்பட நெய் வழங்கப்பட்டதாகவும், அதன் மதிப்பு 250 கோடி ரூபாய் எனவும் தெரிவித்தார். ஆண்டுக்கு 10 கோடிக்கும் மேல் திருப்பதி லட்டு பிரசாதம் விற்பனை செய்யப்படுவதால், இது நாடு முழுதும் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தை விசாரிக்க சி.பி.ஐ., தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் தேவஸ்தான அதிகாரிகள், பால் தர பரிசோதனை நிபுணர்கள் உட்பட 36 பேரை குற்றவாளிகளாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வழக்கில் குற்றவாளிகள் ஈட்டிய பணம், அதில் நடந்த சட்டவிரோத பண பரிவர்த்தனை, ஹவாலா தொடர்புகள், அதன் மூலம் செய்யப்பட்ட முதலீடுகள் ஆகியவற்றை விசாரிக்க பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறை வழக்கு பதிந்துள்ளது.
