திருப்பரங்குன்றம்: ‘துணை முதல்வர் உதயநிதியை முதல்வராக்குவதே குடும்ப ஆட்சியின் நோக்கமாக உள்ளது” என, மதுரையில் பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்தினர் கூறினார்.
அவர் கூறியதாவது: சட்டசபைத் தேர்தலுக்கான தே.ஜ., கூட்டணியின் முதல் கூட்டம் மதுராந்தகத்தில் நடந்தது. இது தி.மு.க.,வுக்கு பேரிடியாக இருந்தது. தொடர்ந்து மதுரையில் நடக்க உள்ள கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
தே.ஜ., கூட்டணி முழுமையானதல்ல என முதல்வர் கூறுகிறார். தி.மு.க., எம்.எல்.ஏ., தளபதி பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் தினமும் பேட்டி கொடுக்கிறார். அதிகாரத்தில் பங்கு இல்லை என முதல்வர் கூறுகிறார். அப்படியானால் அக்கூட்டணி வடிவம் பெற்றுவிட்டதா.
கடந்த தேர்தலில் அளித்த 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 70 தான் நிறைவேற்றப்பட்டுள்ளது. செவிலியர், துாய்மைப் பணியாளர், அரசு ஊழியர், ஆசிரியர்கள் என யாருடைய வாக்குறுதியும் முற்றுப் பெறவில்லை. ஒரு டி.ஜி.பி.,யைகூட நியமிக்க முடி யாத இந்த அரசால் எப்படி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க முடியும்.
இந்த ஆட்சியில் 33 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளன. போலீசாரே, பெண் போலீசை பாலியல் சீண்டல் செய்கின்றனர். பள்ளிகளில் கஞ்சா கிடைக்கிறது. டாஸ்மாக் கடைகள் கூட படிப்படியாக குறையும் என்றனர். இதுபற்றி பதில் சொல்ல வேண்டிய கனிமொழி, காங்., தலைவர் ராகுலை சமாதானம் செய்கிறார். தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா என்பதே கேள்விக்குறி. அப்படியென்றால் வடிவம் பெறாத கூட்டணி எது.
தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி., தேர்வு ரத்து செய்யப்பட்டது பற்றி மதுரை எம்.பி., வெங்கடேசனுக்கு தெரிந்திருக்காது. அதனால்தான் அவர் அதுபற்றி பேசவில்லை. தமிழகத்தில் ஐந்தாண்டுகளில் ஐந்து லட்சம் இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதாக சொன்னார்கள். 90 ஆயிரம் பேருக்குத்தான் கொடுத்திருக்கின்றனர். விஜய்க்கு நல்ல சகுனம்
சி.பி.ஐ., விசாரணைக்குப் பின்னரும் விஜய் எங்களை விமர்சிக்கிறார். நாங்களும் விமர்சிக்கிறோம். அவரது கூட்டத்தில் 41 பேர் இறந்ததற்கு விஜயும், தமிழக அரசும்தான் காரணம். சேலத்தில் இப்போது ஒருவர் இறந்துள்ளார். அவரது எல்லா கூட்டத்திலும் ஒருவர் இறப்பது அவருக்கு நல்ல சகுனம்தான்.
மகளிர் உரிமைத் தொகை ரூ.5 ஆயிரம் வழங்குகின்றனர். பழனிசாமி ரூ.2 ஆயிரம் வழங்குவதாக அறிவித்தார். அதையே முதல்வர் ஸ்டாலின் காப்பி’ அடித்திருக்கிறார். அவர் கொடுப்பதை தடுக்க நாங்கள் வழக்கு தொடுப்பதற்கு முகாந்திரமே இல்லை. மக்கள் வெறுக்கிற ஆட்சியாக உள்ளதால், சமாளிக்க பணம் கொடுக்கின்றனர். இது குடும்ப ஆட்சி. துணை முதல்வரை, முதல்வராக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.
