‘திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றலாம்’ என நீதிமன்றம் உத்தரவிட்டும் அதற்குப் போதிய ஏற்பாடுகள் அதிகாரிகள் தரப்பில் செய்து தரப்படவில்லை என ராம ரவிக்குமார் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “‘தீபம் ஏற்ற இருக்கும் தூணிற்கு மனுதாரர்கள் உட்பட 5 பேர் பூஜை செய்ய அனுமதித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து கொள்ளலாம்’’ எனத் தெரிவித்திருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டி மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு இடைக்காலத் தடை விதித்தது.

இந்த அவமதிப்பு வழக்கு மீண்டும் நீதிபதி சுவாமிநாதன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ”மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் தரப்பில் முதலில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனுக்களை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, தனிநீதிபதியே இது குறித்து முடிவு செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த உத்தரவும், நேற்றைய இடைக்காலத் தடை உத்தரவும் முரணாக இருக்க வாய்ப்பில்லை.
