திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 28 பேரை திருப்பி அனுப்ப உத்தரவு

சென்னை: திருப்பூர் பனியன் கம்பெனிகளில் சட்டவிரோதமாக தங்கி வேலை செய்த, வங்க தேசத்தினர் 28 பேரை, மூன்று மாதங்களுக்குள், அவர்கள் நாட்டுக்கு அனுப்பி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் கம்பெனிகளில், வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிவதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், பனியன் கம்பெனிகளில் போலீசார் சோதனை நடத்தினர். கடந்த ஆண்டு ஜன., 12ல், வங்கதேசத்தை சேர்ந்த முகமது சலீம், முகமது ஆஷிக், முகமது ஆரீப் அலி உட்பட 28 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது, வெளிநாட்டினர் சட்டப்பிரிவின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட நீதிமன்றம், பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட சட்ட ரீதியான ஆவணங்கள் இல்லாமல், நம் நாட்டிற்குள் அவர்கள் நுழைந்தது தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டு உள்ளது என கூறி, 28 பேருக்கும், தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை, தலா 10,000 ரூபாய் அபராதம் விதித்து, கடந்த ஆண்டு ஜூலை 17ல் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து, 28 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அவர்கள் மனுவை, நீதிபதி சுந்தர்மோகன் விசாரித்தார். அப்போது, மனுதாரர்கள் தரப்பில், வழக்கறிஞர்கள் எஸ்.ஷைனி, பி.எம்.போரிஸ் ஆஜராகி, ‘ஓராண்டுக்கு மேலாக சிறையில் உள்ளனர்.

‘இதுவரை அனுபவித்த சிறைவாசம், இந்த குற்றங்களுக்கு போதுமானது. சொந்த நாட்டுக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர்’ என்றனர். இதை ஏற்ற நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஓராண்டுக்கு மேலாக சிறையில் உள்ளனர். ஏற்கனவே அனுபவித்த சிறை தண்டனையே போதுமானது என்பதால், அவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

அவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதால், அவர்களை மூன்று மாதங்களுக்குள் அனுப்பி வைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Source link