திருப்பூர்: ”தமிழக கலாசாரத்தை சீர்கெடுக்கும் பணியில், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஈடுபட்டு வருகிறது,” என, ஹிந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் கடுமையாக சாடினார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் அவர் அளித்த பேட்டி: இதர மதத்தினர் நடத்தும் மாநாடுகளில் பங்கேற்பதோடு, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அரசு, ஹிந்துக்களின் கோரிக்கைகளை மட்டும் ஏற்பதே இல்லை. இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் 100 சதவீதம் ஓட்டு போடுகின்றனர். ஆனால், ஹிந்துக்களின் ஓட்டுகள், கட்சி மற்றும் ஜாதிரீதியாக பிரிந்து கிடக்கிறது. ஹிந்துக்களின் கோரிக்கைகளை யார் நிறைவேற்றுகிறார்களோ, அவர்களுக்கு தான் ஓட்டளிக்க வேண்டும்.
ஹிந்துக்களை கேலி, கிண்டல் செய்யும் அரசுதான் தமிழகத்தில் இப்போது ஆட்சியில் உள்ளது. ஈ.வெ.ரா., மற்றும் கம்யூனிச இயக்கங்களுக்கு ஆதரவாக தி.மு.க., அரசு, புத்தகங்கள் வெளியிட்டு, கருத்தரங்குகளையும் நடத்துகிறது. தி.மு.க.,வும் அதன் கூட்டணி கட்சிகளும் நடத்தும் மாநாடு என்றால், உடனடியாக அனுமதி தரும் தி.மு.க., அரசு, ஹிந்துக்கள் மாநாடு என்றால் மட்டும் அனுமதி மறுக்கிறது.
மெட்ரோ பணி நடப்பதால், நாங்கள் நடத்தும் மாநாட்டுக்கு அனுமதி இல்லை என்கின்றனர். ஒவ்வொரு முறையும் நாங்கள் கோர்ட்டை அணுகியே அனுமதி பெற்று வருகிறோம்.நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், தமிழக கலாசாரத்தை சீரழிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. விஜய் நடந்து போகும் பாதையை, ஒரு இளம்பெண் முத்தமிடுகிறார். இது தான் தமிழக கலாசாரமா? விஜய், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறார் என்று வதந்தி பரப்பப்படுகிறது; ஆனால் அவர், தி.மு.க.,வின் ‘டூல் கிட்’. இவ்வாறு அர்ஜுன் சம்பத் கூறினார்.
