திருப்பூர்: தி.மு.க.,வின் செயல்பாடு முழுவதும், மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் இருக்கிறது என ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஹிந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை: ரம்ஜான் நோன்பிற்காக முஸ்லிம் ஊழியர்கள், ஒரு மணி நேரம் முன்பு அலுவலகத்தை விட்டு செல்ல அனுமதித்து, சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது, அரசு ஊழியர்களிடம் மதப் பிரிவினையை ஏற்படுத்தும் என, எச்சரிக்கிறோம்.
ஒவ்வொரு மதத்திலும் விரதம், பண்டிகை போன்றவை கடைபிடிக்கப்படுகின்றன. அதிலும், ஹிந்துக்கள் கடைபிடிக்கும் விரதங்களை தி.மு.க., ஏளனப்படுத்தியே வந்துள்ளது. ஹிந்துக்களுக்கு எந்த சலுகையும் வழங்காத அரசு, முஸ்லிம்களுக்கு மட்டும் சலுகை வழங்குவது ஏன்?
தி.மு.க.,வின் செயல்பாடு முழுவதும், மத ரீதியாக மக்களை பிளவுபடுத்தும் நோக்கில் இருக்கிறது. சென்னை மாநகராட்சி முஸ்லிம் ஊழியர்களுக்கு தந்துள்ள சலுகையை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
