திருமணம் செய்ய மறுத்த காதலன், காதலியை பைக்கில் தரதரவென இழுத்து சென்ற கொடூரம்

பாட்னா,

பீகாரில் திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை பைக்கில் தரதரவென இழுத்துச் சென்ற காதலனுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.

திருமண விவகாரத்தில் மோதல்

பீகார் மாநிலம் நவாடா பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் நார்திகஞ்ச் மண்டல அலுவலகத்தில் அரசு அளவையர் ஆகப் பணியாற்றி வருகிறார். அவரும் ஒரு இளம்பெண்ணும் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்த நிலையில் அந்த வாலிபர் தனிப்பட்ட காரணத்தால் அந்த பெண்ணை புறக்கணித்து வந்தார்.

இதையடுத்து அந்த பெண் நாலந்தா மாவட்டம் ராஜ்கிர் பகுதியில் உள்ள வேணுவன் அருகே காதலனை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால், அதற்கு அந்த இளைஞர் மறுப்பு தெரிவித்து, அங்கிருந்து தனது பைக்கில் தப்பிக்க முயன்றார்.

பைக்கில் இழுத்துச் செல்லப்பட்ட பெண்

இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், காதலன் தப்பி ஓடாமல் இருக்க அவரது பைக்கின் பின்பகுதியான கேரியர் மற்றும் கைப்பிடியை பலமாகப் பிடித்துக் கொண்டார். இருப்பினும், சிறிதும் இரக்கமில்லாமல் அந்த வாலிபர் பைக்கின் வேகத்தை அதிகரித்தார். இதில் பிடி தளராமல் இருந்த இளம்பெண், சாலையில் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு பதைபதைக்க இழுத்துச் செல்லப்பட்டார்.

பொதுமக்கள் தர்மஅடி

வேகமாகச் சென்ற பைக், கட்டுப்பாட்டை இழந்து நடுச்சாலையில் கவிழ்ந்தது. இதில் இருவருமே கீழே விழுந்து காயமடைந்தனர். இதைப்பார்த்து ஆத்திரமடைந்த அங்கிருந்த பொதுமக்கள், உடனடியாக ஓடிவந்து அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து சரமாரியாக தர்மஅடி கொடுத்தனர்.

பின்னர் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரை உரைய வைத்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link