2026 சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுகிறேன் என வி.சி.க தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்த நிலையில், அந்த முடிவை தி.மு.க ரசிக்கவில்லை என்கிறார்கள் வி.சி.க-வினர். தேர்தலில் திருமா போட்டியிடுகிறாரா இல்லையா என்பது குறித்து விசாரித்தோம்.
தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 8 தொகுதிகள் பெற்ற நிலையில், கடந்த மார்ச் 29-ம் தேதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் அக்கட்சித் தலைவர் திருமாவளவன்.
அதன்படி, திருப்போரூரில் பன்னீர்தாஸ், அரக்கோணத்தில் எழில் கரோலின், செய்யூரில் சிந்தனைச் செல்வன், பெரியகுளத்தில் ஆற்றலரசு, பண்ருட்டியில் அப்துல் ரகுமான், கள்ளக்குறிச்சியில் மாலதி ஆகியோரை வேட்பாளராக அறிவித்தார்.
காட்டுமன்னர்கோவிலில் கட்சியின் தலைவர் என்கிற முறையில் நானே களமிறங்குகிறேன் என அறிவித்தார் திருமாவளவன். “‘2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக அரசியல் சூழல் வெகுவாக மாறவிருக்கிறது, அதனாலேயே மாநில அரசியலுக்குத் திரும்புகிறேன்” என்றும் குறிப்பிட்டார். ஆனால், அவர் போட்டியிடுவதாக அறிவித்திருந்த நிலையில், அதில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
