திருவனந்தபுரம்; கும்பமேளா புகழ் மோனலிசா, கேரளா கோவிலில் இன்று காதலனை திருமணம் செய்து கொண்டார். பெற்றோர்

திருவனந்தபுரம்; கும்பமேளா புகழ் மோனலிசா, கேரளா கோவிலில் இன்று காதலனை திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் எதிர்ப்பால், பாதுகாப்பு கோரி தம்பனூர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்தார்.

2025ம் ஆண்டு பிரயாக்ராஜில் கும்பமேளா நடைபெற்றது. அப்போது ருத்ராட்ச மாலைகளை விற்று வந்த மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த மோனாலிசா போஸ்லே என்பவர் தமது வசீகரிக்கும் கண்களால் பெரியளவு பேசப்பட்டார். ஊடகங்களில் அவரின் போட்டோக்கள், வீடியோக்கள் வைரலாக, அவருக்கு சினிமாவில் கதாநாயகி வாய்ப்பும் தரப்பட்டது.

இந் நிலையில் கும்பமேளா புகழ் மோனாலிசா தமது காதலனுடன் கேரளாவில் உள்ள தம்பனூர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சம் அடைந்துள்ளார். அவரின் காதலன் பெயர் பர்மான். மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர். இவர்களுக்கு காதலுக்கு மோனாலிசாவின் குடும்பம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

ஆனாலும் காதலில் உறுதியாக இருந்த மோனாலிசா தமது காதலன் பர்மானை அருமனூரில் உள்ள கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டதால் திருவனந்தபுரம் அருகில் உள்ள தம்பனூர் போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு கோரி ஆஜரானார். தங்களை பிரிக்க தந்தை ஜெய் சிங் போன்ஸ்லே முயல்கிறார், எனவே எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து கேரளா போலீசார் கூறியதாவது;

முகநூல் மூலமாக மோனாலிசாவும், பர்மானும் அறிமுகமாகி கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். மோனாலிசா நடித்து வரும் முதல் படம் டைரி ஆப் மணிப்பூர். இதன் படப்பிடிப்புக்காக கேரளா வந்த போது அவருடன் தந்தை ஜெய்சிங் போன்ஸ்லேவும் வந்துள்ளார். எர்ணாகுளத்தில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் எழுந்தது.

இதையடுத்து, தனது காதலன் பர்மானுடன் திருவனந்தபுரத்திற்கு ரயிலில் வந்த மோனாலிசா அருமனூர் கோயிலில் காதலனை திருமணம் செய்து கொண்டுள்ளார். பின்னர் தம்பனூர் போலீஸ் ஸ்டேஷன் வந்து எங்களை சந்தித்து விவரத்தை கூறி உள்ளார். காதலனுடன் வாழ விரும்புகிறேன், ஆனால் தந்தை மீது புகார் தரமாட்டேன் என்று கூறி உள்ளார். இது குறித்து நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு கேரளா போலீசார் தெரிவித்தனர்.

Source link