திருவனந்தபுரம் : கேரள மாநில பா.ஜ., தலைவரும் நேமம் தொகுதி வேட்பாளருமான ராஜீவ் சந்திரசேகர், கர்நாடக மாநிலத்தில் உள்ள 200 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்தை மறைத்து வேட்புமனு தாக்கல் செய்திருப்பதாக காங்., குற்றஞ்சாட்டியுள்ளது.
கேரளாவில், ஏப்.,9ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், தேர்தல் கமிஷனை ஏமாற்றும் வகையில், பா.ஜ., மாநில தலைவரும், நேமம் தொகுதி வேட்பாளருமான ராஜீவ் சந்திரசேகர் செயல்பட்டதாக காங்., குற்றஞ்சாட்டியுள்ளது.
இது குறித்து தேர்தல் கமிஷனுக்கு காங்., எழுதிய கடிதம்: ராஜீவ் சந்திரசேகருக்கு கர்நாடக மாநிலம் பெங்களூரில் செல்வந்தர்கள் அதிகம் வசிக்கும் கோரமங்கலாவில், 49,000 சதுர அடியில் பிரமாண்ட பங்களா இருக்கிறது. அந்த நிலத்தின் மதிப்பு மட்டுமே 200 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும்.
வேட்பு மனுத் தாக்கல் துவங்குவதற்கு முன், கடந்த 17ம் தேதி தான், அந்த சொத்துக்கான வரியை அவர் செலுத்தி இருக்கிறார்.
கடந்த தேர்தலின்போது, இதே விலாசத்தில் தான் வசித்து வருவதாக பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இந்த சட்டசபை தேர்தலில், 200 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த சொத்து விபரங்களை அவர் மறைத்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி குற்றம். எனவே, தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
