திருவனந்தபுரம்: ‘சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜை காலத்தில், அபிஷேக நெய் விற்பனையில், 25 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளது’ என, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் தணிக்கை துறை தெரிவித்துள்ளது.
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, நெய் அபிஷேக பாக்கெட்டுகள் கோவில் சன்னிதானத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த சூழலில், அய்யப்பன் கோவிலில், கடந்தாண்டு மண்டல அபிஷேகம் மற்றும் மகர விளக்கு சீசனில், நெய் அபிஷேகத்துக்கு விற்கப்படும், ‘அதி இஷ்டம் நெய்’ விற்பனையில் முறைகேடு நடந்ததாக கடந்த ஜனவரியில் புகார் எழுந்தது.
கொள்முதல்
கேரள உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறையினர் மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் தணிக்கை துறை விசாரணை நடத்தின. முதற்கட்ட விசாரணையில், 16 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்தது தெரிய வந்தது.
இந்நிலையில், முறைகேடு குறித்து விசாரணை நடத்திய திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் தணிக்கை துறை, இடைக்கால அறிக்கையை கேரள உயர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்துள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
விசாரணையில், அய்யப்பன் கோவிலில் நெய் பாக்கெட்டுகள் விற்பனை செய்த கணக்குகளில், 25.52 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இரண்டு நெய் சேகரிப்பு மையங்களில் இந்த முறைகேடு நடந்து உள்ளது.
நெய் சேகரிப்பு, வடிகட்டுதல் மற்றும் பாக்கெட்டுகளில் நிரப்புதல் போன்ற முறைகளிலும் சரியான முறை பின்பற்றப்படவில்லை. பாக்கெட்டுகளில் நெய்யின் அளவு குறித்த கன அளவு அளவீடும் மேற்கொள்ளப்படவில்லை.
நெய் விற்பனை மற்றும் கொள்முதல் தொடர்பான பதிவேடுகளும் முறையாக கையாளப்படவில்லை-.
பிரதான கிடங்கில் இருந்து பெறப்பட்ட நெய்யில் இருந்து எத்தனை பாக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டன போன்ற விபரங்களும் கணக்கு பதிவேடுகளில் இல்லை.
இந்த விபரங்கள், பள்ளி நோட்டு புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அதில் பல திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
ஒவ்வொரு கிலோ பிளாஸ்டிக் பாக்கெட் ரோலில் இருந்து தயாரிக்கப்பட்ட நெய் பாக்கெட்டுகளின் எண்ணிக்கை, வெவ்வேறு நாட்களில் கணிசமாக மாறுபட்டுஉள்ளது-.
சில சமயங்களில், ஒரு கிலோ ரோலில் இருந்து, 332 பாக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.
வேறு சில நாட்களில், ஒரு கிலோ ரோலில் இருந்து, 636 பாக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக நான்கு முறை தேவஸ்வம் போர்டு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
பரிந்துரை
அவர்களிடம் இருந்து சரியான பதில் இல்லை. அடுத்த சீசனுக்குள், நெய் விற்பனை முறையை டிஜிட்டல் மயமாக்க தணிக்கை துறை பரிந்துரைக்கிறது.
விற்பனை கவுன்டர்களில் கூடுதல் ஊழியர்களை நியமிக்கவும், சன்னிதானம் மற்றும் பம்பாவில் மாதாந்திர பூஜைகளில் காலாண்டு தணிக்கைகள் நடத்தவும் பரிந்துரைக்கப்படுகிறது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது-.
இதை ஆய்வு செய்த கேரள உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டின் தணிக்கை துறைக்கு உத்தரவிட்டது.
