திற்பரப்பு அருவிக்கு தண்ணீர் வரத்து குறைந்தது- சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றம்

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் விவசாயிகள் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு, பொய்கை அணைகளை நம்பி விவசாயிகள் சாகுபடி செய்து வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் கன்னப்பூ, கும்பப்பூ என இருபோக சாகுபடிகள் செய்யப்பட்டு வருகிறது.

தற்பொழுது கும்பப்பூ சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு சில பகுதிகளில் அறுவடைக்கு இன்னும் சில நாட்கள் ஆகும். எனவே பேச்சிப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மே மாதத்தில் கன்னிப்பூ சாகுபடி பணியை விவசாயிகள் தொடங்குவார்கள். அதற்காக ஜூன் 1-ந்தேதி பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து காணப்படுகிறது.

அணைகளின் நீர்மட்டம் சரிந்து காணப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 20.32 அடியாக உள்ளது. அணைக்கு 342 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 402 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

பெருஞ்சானி அணை நீர்மட்டம் 12.50 அடியாக உள்ளது. அணைக்கு 62 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 4.66 அடியாகவும், சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 4.75 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 17.20 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 16.98 அடியாகவும் உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் கிடுகிடு என சரிந்தது.

அணையின் நீர்மட்டம் இன்று காலை 4.20 அடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் சரிந்து வரும் நிலையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் உள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியலும் தண்ணீர் வரத்து குறைந்து காணப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக இல்லாத அளவில் லேசான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அங்கு குளிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. திற்பரப்பு அருவிக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.

Source link