‘தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க., இணைவதற்கு காரணமாக இருந்த கனிமொழியை புறக்கணிக்கும் வகையில், சபரீசன் தரப்பினர் செயல்படுகின்றனர்’ என, தி.மு.க., மகளிர் அணி நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தே.ஜ., கூட்டணியில் தே.மு.தி.க., இணைவது உறுதியாகி இருந்தது. கடைசி நேரத்தில், அக்கட்சியின் பொதுச்செயலர் பிரேமலதாவை தி.மு.க., துணை பொதுச் செயலர் கனிமொழி இரண்டு முறை சந்தித்து பேசினார்.
தி.மு.க., கூட்டணியில் இணைவதால் கிடைக்கும் எம்.எல்.ஏ.,க்கள், ராஜ்யசபா எம்.பி., பதவியால் கட்சிக்கு கிடைக்கும் தேசிய அங்கீகாரம் போன்றவற்றை எடுத்துரைத்தார். கூடவே, அ.தி.மு.க., கூட்டணிக்கு செல்வதால் விளையும் நஷ்டங்களையும் பட்டியல் போட்டு விளக்கினார்.
கடும் குழப்பம்
கடும் குழப்பத்தில் இருந்த பிரேமலதா, தி.மு.க., பக்கம் செல்வதென முடிவெடுத்தார். நேற்று முன்தினம், சென்னை அறிவாலயத்திற்கு வந்த பிரேமலதா, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தார்.
தி.மு.க., கூட்டணிக்கு தே.மு.தி.க.,வை, கனிமொழி அழைத்து வந்ததை முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் தரப்பு ரசிக்கவில்லை.
எனவே, சபரீசன் முயற்சியால் கூட்டணிக்கு தே .மு.தி.க., வந்துள்ளதாக, மூத்த அமைச்சர் களிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர் . இதை அறிந்த கனிமொழி ஆதரவாளர்கள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கருணாநிதி பாணி மகளிர் அணி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
எதிர்க்கட்சி தலைமையில் கூட்டணி சேர விடாமல், தன் தந்தை கருணாநிதி பாணியில் கூட்டணி அமைக்கும் பணியை கனிமொழி வெற்றிகரமாக நிறைவேற்றுவார்.
தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இணைந்ததன் பின்னணியில் இருந்து முழுக்க முழுக்க செயல்பட்டவர் கனிமொழி. சட்டசபை தேர்தலில் ஒற்றை இலக்க ‘சீட்’, ஒரு ராஜ்யசபா எம்.பி., என, கனிமொழி பேச்சு நடத்தினார்.
இதற்கு சம்மதம் தெரிவித்தே, தி.மு.க., கூட்டணிக்கு பிரேமலதா வந்துள்ளார். அதேநேரம், சபரீசன் தரப்பும் பிரேமலதாவிடம் பேச்சு நடத்தியது. ஆனால், அந்த பேச்சுகளை பிரேமலதா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ஏற்கனவே, கட்சியின் தென் மண்டல பொறுப்பாளராக கனிமொழி நியமிக்கப்பட்டதும், துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில், 22 சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெறும் பொறுப்பு அவரிடம் வழங்கப்பட்டிருந்தது.
கட்சி நிர்வாகிகள் மற்றும் ஓட்டுச்சாவடிகளின் நிர்வாகிகளை சந்தித்து, தேர்தல்பணிகளில் கனிமொழி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இப்படி இவர் செயல்பட்டுக் கொண்டிருக்க, சபரீசன் சமீபத்தில் தென் மண்டலத்திற்குள் நுழைந்து, கட்சி நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து பேசினார்; நிறைய உத்தரவுகளையும் போட்டுள்ளார். இதை, அம்மாவட்ட நிர்வாகிகள் விரும்பவில்லை.
தற்போது, தே.மு.தி.க.,வை கூட்டணிக்கு அழைத்து வந்த கனிமொழியை, முதல்வர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார். இதை பொறுக்க முடியாமல் தான், சபரீசன் தரப்பினர், தங்கள் தரப்பு தான் தே.மு.தி.க.,வை கூட்டணிக்கு அழைத்து வந்ததுபோல் செய்தி பரப்புகின்றனர்; அது வருத்தமாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
– நமது நிருபர் –
