கூட்டணிக் கணக்குகள் வெற்றிகரமாக முடிந்துவிட்டதால், அடுத்தக்கட்டமாக பிரசாரம் மற்றும் தேர்தல் அறிக்கை வெளியிடுவது குறித்தான ப்ளானில் இறங்கியுள்ளது தி.மு.க.
கடந்த ஒரு வாரமாக நடந்து வந்த தி.மு.க வேட்பாளர்களுக்கான நேர்காணல் முடிவடைந்தது. மற்றொருபுறம், தி.மு.க கூட்டணியில் இழுபறியாக இருந்த மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட், வி.சி.க உள்ளிட்ட கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டையும் தி.மு.க தலைமை ஒரே நாளில் இறுதி செய்துவிட்டது.
மக்கள் நீதி மய்யத்திற்கு இரண்டு இடங்கள் என்றும், அதிலும் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று தி.மு.க வைத்த கோரிக்கையால் அந்த கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என்கிற அறிவிப்பை வெளியிட்டுவிட்டது.இதனால் தி.மு.க பிற கூட்டணிக் கட்சிகளுடன் கிட்டதட்ட தொகுதி பங்கீட்டை முடித்துவிட்டது.
அடுத்த இரண்டு நாட்களுக்குள் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதையும் தி.மு.க தரப்பு முடிவு செய்துவிடும். ஏற்கனவே காங்கிரஸ் கட்சி நாற்பது தொகுதிகளின் பட்டியலை தி.மு.க தரப்பிடம் கொடுத்துள்ளது. அதே போல், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த பட்டியலை இரண்டு நாட்களுக்குள் அளித்துவிடும் என தெரிகிறது.
