தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி கிரிவலம்: நயினார், காடேஸ்வரா உள்ளிட்டோர் பங்கேற்பு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில், நீதிமன்றம் உத்தரவின்படி தீபம் ஏற்ற வலியுறுத்தி, முருக பக்தர்கள், ஹிந்து அமைப்பினர் சென்ற கிரிவலத்தில், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, பவுர்ணமி தினமான நேற்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலத்தில் கலந்து கொள்ள வேண்டும் என, முருக பக்தர்கள் பேரவை, ஹிந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்பினர் அழைப்பு விடுத்திருந்தனர்.

வழக்கமாக, திருப்பரங்குன்றத்தில் பவுர்ணமியன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வர். இந்நிலையில், முருக பக்தர்கள் பேரவை, ஹிந்து முன்னணி அமைப்பினரின் அழைப்பை ஏற்று, நேற்று பல்யிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலத்தில் கூட்டம், கூட்டமாக பங்கேற்றனர்.

பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநில செயலர் கதலி நரசிங்கபெருமாள் தலைமையில் நிர்வாகிகள், ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமையில் நிர்வாகிகள் ஹிந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராமரவிக்குமார் தலைமையில் நிர்வாகிகள், வி.எச்.பி., நிர்வாகிகள், அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு பொதுச்செயலர் ராமலிங்கம், ஹிந்து ராஷ்ட்ரிய சபா மாநில தலைவர் கிருஷ்ண குமார் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

முருக பக்தர்கள் பேரவையினர் தனியாக கிரிவலத்தில் பங்கேற்றனர். முருக பக்தர்கள் பேரவையினர், கிரிவலத்தில் பங்கேற்ற ஒரு லட்சம் பக்தர்களுக்கு ருத்ராட்சம் இலவசமாக வழங்கினர்.

Source link