சென்னை: சட்டசபையில், சபாநாயகர் இருக்கையின் வலது புறம் ஆளும்கட்சிக்கும், இடது புறம் எதிர்க்கட்சிகளுக்கும் இருக்கைகள் ஒதுக்கப்படுவது நடைமுறை. அதன்படி ஆளும்கட்சி வரிசையில், முதல்வர் ஸ்டாலினுக்கு, தனி இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து அமைச்சர்கள் ‘சீனியாரிட்டி’ அடிப்படையில் இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
முதல்வருக்கு அடுத்த இருக்கையில், சட்டசபை முன்னவரும், மூத்த அமைச்சருமான துரைமுருகன் அமர்வார். அவருக்கு அடுத்து, துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் நேரு, பெரியசாமி, வேலு, பன்னீர்செல்வம் ஆகியோர் அமர்வர். அமைச்சர் துரைமுருகன், இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் சபைக்கு வராததால், கடந்த மூன்று நாட்களாக, அவரது இருக்கை காலியாக இருந்தது. நேற்று, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பன்னீர்செல்வம் ஆகியோர் பதிலுரை அளித்த பின், அமைச்சர் துரைமுருகன் இருக்கையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் வந்து அமர்ந்தார். ஒரு மணிநேரம் தி.மு.க., கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.,க்கள், முதல்வரை புகழ்ந்து பேசினர். அதை முதல்வர் அருகில் அமர்ந்து, மகேஷ் கேட்டுக்கொண்டிருந்தார்.
அவரை முதல்வரும், துணை முதல்வரும் கண்டு கொள்ளவில்லை. இதை கவனித்த மூத்த அமைச்சர்கள், எதுவும் செய்ய முடியாமல், வேடிக்கை பார்த்தனர்.
பாரம்பரியமிக்க சட்டசபையில், சபை முன்னவர் அமர வேண்டிய இருக்கையில், ஜூனியர் அமைச்சர் மகேஷ் அமர்ந்ததை, எதிர் வரிசையில் அமர்ந்திருந்த கூட்டணி கட்சியினரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
