துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே வேடநத்தத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவி, மார்ச், 10ல் திடீரென மாயமானார். மறுநாள் அங்குள்ள காட்டுப் பகுதியில், ஆடைகள் களைந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.
குளத்துார் போலீசார், வழக்கு பதிந்து விசாரித்தனர். கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி, மாணவியின் உறவினர்கள், கிராம மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குற்றவாளிகளை விரைந்து கைது செய்வதாக, கலெக்டர் இளம்பகவத் உறுதி அளித்ததை தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், கொலை நடந்து ஐந்து நாட்களை கடந்தும், இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாததால், போலீசார் மீது மாணவி குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வழக்கு விசாரணை தொடர்பாக சட்டம் – ஒழுங்கு ஏ.டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள், துாத்துக்குடி மாவட்டத்தில் முகாமிட்டு கண்காணித்து வருகிறார்.
இதற்கிடையே, கொலையாளிகள் குறித்த எவ்வித தகவலும் கிடைக்காத நிலை நீடித்து வருவதால், போலீசார் திணறி வருகின்றனர்.
இதுகுறித்து, காவல் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: மாணவி கொலை தொடர்பாக, 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 20க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
மாணவியிடம் நெருக்கமாக பழகிய தோழிகள், சக மாணவர்களிடம் விசாரணை நடத்த முடியாத நிலை இருந்து வருகிறது. விசாரணைக்கு செல்லும் போலீசாரிடம், அவர்களின் பெற்றோர், ‘அடிக்கடி வர வேண்டாம்’ என, ஒத்துழைக்க மறுக்கின்றனர்.
வட மாநில தொழிலாளர்கள், வெளியூர் நபர்களை, சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தினோம். இருப்பினும், முழுமையான தகவல் கிடைக்கவில்லை. கிராமப்பகுதி என்பதால், ‘சிசிடிவி’ கேமரா காட்சிகள் ஏதும் சிக்கவில்லை. மாணவி பயன்படுத்திய மொபைல் போன், அவரது தோழிகளின் மொபைல் போனை ஆய்வு செய்தபோதிலும், எவ்வித துப்பும் கிடைக்கவில்லை.
காட்டுப் பகுதியில், இயற்கை உபாதைக்கு செல்லும் பெண்களிடம், இதற்கு முன் ஏதேனும் பாலியல் ரீதியான தொந்தரவுகள் நடந்துள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தினோம்.
அதில், சந்தேகத்தில், 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் சிக்கியுள்ளார். ஆனால், சம்பவம் நடந்த நாளில், அவர் காட்டுப் பகுதியில் இருந்ததற்கான எந்தவித ஆதாரமும் இல்லாத நிலை உள்ளது. ஓரிருநாளில், குற்றவாளிகளை பிடித்து விடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாணவியின் உடலை வாங்க, குடும்பத்தினர் மறுத்து வரும்நிலையில், அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
